22 வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்றால் நம்மில் பலரின் பதில் என்னவாக இருக்கும்? நிச்சயம் பலரும் வேலை, கல்வி, வேலை தேடுவது என இருக்கும்.
ஆனால் தனது 23 வயதில் விமான போக்குவரத்து தொடர்பான ஸ்டார்ட் அப்பை நிறுவியவர் தான் கனிகா டேக்ரிவால்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற காலம் போய், இன்று அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பல பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு, சாதனை படைத்த கனிகாவை பற்றி பார்க்கலாம்.
குடும்பம்
1994ம் ஆண்டு மார்வாடி குடும்பத்தில் பிறந்த கனிகா, அவரின் தந்தை அனில் டேக்ரிவால், தாய் சுனிதா. தம்பி கனிஷ்க். கனிகா விமானம் ஓட்ட ஆசைப்பட்டபோது அவரின் குடும்பத்தினர், இதெல்லாம் செட் ஆகாது என நிராகரித்துள்ளனர். மாருதி ஷோரூம்களை பல நகரத்தில் வைத்திருந்த கனிகாவின் தந்தை, ரியஸ் எஸ்டேட் மற்றும் கெமிக்கல் வணிகமும் செய்து வந்தவர்.
கனிகாவின் கல்லூரி பருவம்
கனிகா பிறந்தது போபால் என்றாலும், தற்போது வசிப்பது டெல்லியாகும். இவரின் பள்ளி கல்வியினை தென்னிந்தியாவில் ஊட்டியில் படித்துள்ளார். அதன் பிறகு இளங்கலை கல்லூரி படிப்பினை மும்பையில் படித்துள்ளார். எம்பிஏவினை லண்டனிலும் படித்துள்ளார். எம்பிஏ படிக்கும்போது தனக்கு பிடித்தமான விமான துறை சம்பந்தமான சிறு சிறு கோர்ஸ்களையும் படித்துள்ளார். இது சம்பந்தமான பணியினையும் பகுதி நேரமாக பணிபுரிந்துள்ளார்.
என்னசெய்ய போகிறாய்?
எல்லா குடும்பங்களிலும் இருந்ததுபோல படிப்பினை முடித்ததும் வேலையா திருமணமா? என்ற கேள்வி எழும்பவே நான் விமானம் ஓட்ட வேண்டும் என தனது ஆசையினை தெரிவித்துள்ளார். ஆனால் அதெல்லாம் நம் குடும்பத்திற்கு செட்டே ஆகாது என குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
இலக்கு இது தான்
அதோடு கனிகாவின் ஆசையில் ஒன்று மலிவான விலையில் அனைவரும் பயன்பெறும் வகையில் பிளைட் சார்ட் சேவை கொண்டு வருவது தான். தற்போது பஸ்கள், ரயில்களுக்கு எப்படி? எது மலிவானது? எங்கு கிடைக்கும் என பட்டியலிடுவது போல. விமானங்களையும் பட்டியலிட வேண்டும் (உபெர் போன்று) என்பது தான். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்பது தான் இலக்காகவும் இருந்துள்ளது.
கேன்சரால் பாதிப்பு
அதனை செயல்படுத்த நிறுவனம் ஒன்றை தொடங்க நினைத்தவருக்கு பெரும், அதிர்ச்சியும் காத்துக் கொண்டிருந்தது. நிறுவனத்தினை தொடங்க செயல்பாடுகளை தொடங்கிய சிறிது காலத்திலேயே கேன்சரால் பாதிக்கப்படுகிறார். 1 வருடம் பல கடினமான பிரச்சனைகளை எதிர்கொண்டு அதிலும் மீண்டு வந்துள்ளார். இது மேற்கொண்டு அவரது வணிகத்தினை ஒரு வருடம் தள்ளிபோக வைக்கிறது.
போராட்டமான காலம்
பல்வேறு சவால்களுக்கும் மத்தியிலும், ஜெட்செட்கோ (JetSetGo) ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் கனிகா டேக்ரிவால் நிறுவுகிறார். இது கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தனிப்பட்ட விமானங்களை, ஹெலிகாப்டர்களையும், அனைவரும் அணுகும் வகையிலும் உருவாக்கப்பட்டது. இது உபெர் போன்ற மாடலை கொண்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். விமானத்திலேயே டேக்ஸி சேவை என்பது பலருக்கும் புதுமையான யோசனையாக இருந்தாலும், இதுவே வருடத்திற்கு 150 கோடி ரூபாய் சம்பாதிக்கும் தொழிலதிபராகவும் கனிகாவினை மாற்றியுள்ளது.
எளிதில் அணுக வாய்ப்பு?
எப்படியோ பல சவால்களுக்கும் மத்தியில். இந்த ஸ்டார்ட் அப் தற்போது இந்தியாவின் சிறந்த ஏர் டாக்சி நிறுவனமாகவும் உள்ளது. இது தொழில் நுட்பம், தனித்துவமான நடைமுறைகள், ஸ்மார்ட் திட்டம் என பலவற்றையும் பயன்படுத்துகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு செலவினை குறைக்கவும், எளிதில் அணுகும் படியும் உள்ளது. குறிப்பாக விமான பயணிகளுக்கு விமானத்தினை எளிதில் அணுகும் வகையில் உள்ளதாகவும் மாற்றியுள்ளது.
சொத்து மதிப்பு?
கனிகாவின் இன்றைய சொத்து மதிப்பு ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி 70 மில்லியன் டாலராகும். தனது இளம் வயதிலேயே வணிகத்தினை தொடங்கிய கனிகா, 32 வயதில் 10 தனியார் ஜெட்டுக்கு உரிமையாளர். வாழ்க்கையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கும் பெண்களுக்கு கனிகா ஒரு நம்பிக்கை. உதாரணம்.