இந்திய வங்கித்துறையை வலிமையாக மாற்ற வேண்டும் என்ற முக்கியமான இலக்குடன் ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் காரட் ஜனதா சஹாகாரி பேங்க் லிமிடெட் வங்கியில் போதுமான மூலதனமும், வருமானம் ஈட்டும் வழிகளும் இல்லாத காரணத்திற்காக இவ்வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் இவ்வங்கி வாடிக்கையாளர்கள் அச்சத்தில் இருந்த நிலையில் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை
யெஸ் வங்கி பிரச்சனையைத் தொடர்ந்து லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகம் பிரச்சனையின் காரணமாக இவ்வங்கி மீது மோரோடோரியம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நீண்ட ஆலோசனைக்குப் பின் சிங்கப்பூர் DBS வங்கியுடன் இணைக்கப்பட்டது.
இந்த மோரோடோரியம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலத்தில் இவ்வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணம் குறித்த பயத்தில் இருந்தனர். இதேபோல் தற்போது காரட் ஜனதா சஹாகாரி பேங்க் வங்கி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
டெபாசிட் பணம் வாபஸ்
காரட் ஜனதா சஹாகாரி பேங்க்-ன் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளதைத் தொடர்ந்து இவ்வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு வைப்பு நிதி காப்பீடு மற்றும் கிரெடிட் உத்தரவாத அமைப்பு (DICGC) மூலம் 99 சதவீத வாடிக்கையாளர்களுக்கு முழுமையான பணம் திரும்பிக் கொடுக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பணம் வாபஸ் பணி துவக்கம்
காரட் ஜனதா சஹாகாரி பேங்க்-ன் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ததைத் தொடர்ந்து DICGC அமைப்பு இவ்வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் பணிகளை துவங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்தப் பணிகள் முழுமையாக முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதிகப்படியாக 5 லட்சம் ரூபாய்
வைப்பு நிதி காப்பீடு மற்றும் கிரெடிட் உத்தரவாத அமைப்பு (DICGC) மூலம் ஒரு வாடிக்கையாளருக்கு அதிகப்படியாக 5 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே கொடுக்க முடியும் என்பதால், காரட் ஜனதா சஹாகாரி பேங்க்-ல் 5 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக டெப்பாசிட் செய்த அனைவருக்கும் 100% தொகை கிடைக்கும்.
டிசம்பர் 7 முதல்
ரிசர்வ் வங்கி உத்தரவின் படி டிசம்பர் 7ஆம் தேதி முதல் வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படும் காரணத்தால், இவ்வங்கி சார்ந்த எவ்விதமான பணிகளையும் செய்யக் கூடாது. குறிப்பாக டெபாசிட் பெறுவது, டெபாசிட் தொகையைத் திருப்பிச் செலுத்துவது போன்ற காரியங்களைச் செய்யக் கூடாது.
மேலும் இவ்வங்கியில் போதுமான மூலதனமும், வருமானம் ஈட்டும் வழிகளும் இல்லாத காரணத்திற்காக இவ்வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது கவனிக்கப்பட வேண்டியது.