மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கி வரும் கர்நாலா நகரி சஹாகாரி வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இவ்வங்கியில் வாடிக்கையாளர்களின் டெப்பாசிட் பணத்தைத் திருப்பிக் கொடுக்கக் கூடப் போதிய பணம் இல்லாத காரணத்தால் கர்நாலா நகரி சஹாகாரி வங்கி தனது சேவைகளைத் தொடர உரிமத்தை ரத்து செய்து தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.
வெள்ளிக்கிழமை முதல் வர்த்தகம் செய்வதிலிருந்து விலகியுள்ள கர்நாலா நகரி சஹாகாரி வங்கியில் டெப்பாசிட் செய்துள்ள 95 சதவீதம் பேருக்கு DICGC அமைப்பின் இன்சூரன்ஸ் மூலம் 5 லட்சம் வரையிலான தொகை டெப்பாசிட் செய்துள்ளவர்கள் அனைவருக்கும் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு வங்கிக்கு DICGC அமைப்பின் இன்சூரன்ஸ் இருக்கும் பட்சத்தில் டெப்பாசிட் செய்துள்ளவர்கள் அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும். அந்த வகையில் தான் தற்போது கர்நாலா நகரி சஹாகாரி வங்கியில் டெப்பாசிட் செய்துள்ளவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப் போதுமான பணம் இல்லாத போதும் 95 சதவீதம் பேர் முழுமையான பணத்தைப் பெறுகின்றனர்.
சமீபத்தில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதனால் நிதிநிலை மோசமாக இருக்கும் பல வங்கிகள் அடுத்தடுத்து சிக்கி வருகிறது.