வெளிமாநில பதிவு கொண்ட வாகனத்தை கர்நாடகாவில் பயன்படுத்துகிறீர்களா? – முதல்ல இதை படிங்க..

பெங்களூரு: இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் சாலை வரி என்பது வேறுபடுகிறது. அந்த வகையில் ஒரு மாநிலத்தில் நாம் வாகனத்தை வாங்கி பதிவு செய்யும் போது அந்த மாநிலத்திற்கென சாலை வரி செலுத்த வேண்டும். பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை மற்ற மாநிலங்களில் சில காலத்திற்கு மட்டுமே இலவசமாக பயன்படுத்தலாம்.

குறிப்பிட்ட காலம் முடிந்த உடன் அந்த மாநில ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனத்தை பதிவு செய்து அந்த மாநில வாகனமாக மாற்ற வேண்டும். அப்போது அதற்கான சாலை வரி உள்ளிட்டவைகளை செலுத்த வேண்டும். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வெளிமாநில பதிவு கொண்ட வாகனங்கள் பல உரிமம் பெறாமலும் முறையாக வரி செலுத்தாமலும் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டு போக்குவரத்து துறை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

வெளிமாநில பதிவு கொண்ட வாகனத்தை கர்நாடகாவில் பயன்படுத்துகிறீர்களா? – முதல்ல இதை படிங்க..

கர்நாடக மாநில போக்குவரத்து துறை வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு கர்நாடகாவில் எந்த வரியும் செலுத்தாத வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து 20 நாட்களில் மட்டும் 40 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநில போக்குவரத்து துறை சார்பாக மாநிலம் முழுவதும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெங்களூரு பகுதியில் வெளி மாநிலங்களில் பதிவு செய்துவிட்டு கர்நாடகாவில் சாலை வரி செலுத்தாமல் நீண்ட காலமாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களை தேடி கண்டுபிடித்து அபராதம் பெறுகின்றனர்.

பெங்களூருவில் அனைத்து பகுதிகளிலும் இந்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மார்ச் 1 முதல் மார்ச் 20ஆம் தேதிக்கு உட்பட்ட 20 நாட்களில் மட்டும் 40 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறோம் என கர்நாடக மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. உரிமம் பெறாமலும் பொருத்தமான வரிகளை செலுத்தாமலும் பெங்களூருவில் பயன்படுத்தப்பட்டு வரும் வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை தொடர்ந்து கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலில் கர்நாடக போக்குவரத்து துறையினர் 544 வழக்குகளை பதிவு செய்திருப்பதாகவும் 20 நாட்களில் மட்டும் 244 வாகனங்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த வாகன உரிமையாளர்களிடமிருந்து நிலுவையில் இருந்த 39.8 கோடி ரூபாய் வரியை வசூல் செய்திருப்பதாகவும் 3.5 லட்சம் ரூபாயை அபராதமாக வசூல் செய்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் அதிகபட்சமாக எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் தான் இப்படி வெளிமாநில பதிவு கொண்ட வாகனங்கள் அதிகளவில் சிக்கி இருக்கின்றன. அந்த வகையில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் 11.7 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு பெங்களூருவில் 9.4 கோடி ரூபாயும் , கே ஆர் புரம் பகுதியில் 3.7 கோடி ரூபாயும் வசூல் ஆகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முதல் கட்டமாக போக்குவரத்து துறை கர்நாடகாவில் எந்த உரிமமும் பெறாமல் இயங்கி வந்த சொகுசு வாகனங்களை இலக்காக வைத்து தான் இந்த நடவடிக்கையை தொடங்கினர். அப்போது தான் கர்நாடகாவில் இவ்வாறு பல்வேறு வாகனங்கள் உரிமம் பெறாமல் பயன்படுத்தப்படுவது தெரிய வந்து நடவடிக்கையை தீவிரப்படுத்தினோம் என போக்குவரத்து துறை ஆணையர் யோகேஷ் தெரிவித்துள்ளார். இவ்வாறு கர்நாடகாவில் நடவடிக்கை எடுக்கப்பட்ட பெரும்பாலான வாகனங்கள் டெல்லி, புதுச்சேரி ,டாமன் & டையூ உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தியாவிலேயே தற்போதைக்கு கர்நாடக மாநிலம் தான் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு அதிகபட்ச சாலை வரியை விதிக்கிறது. உதாரணமாக 5 லட்சம் ரூபாய்க்கும் கீழ் மதிப்பு கொண்ட வாகனங்களுக்கு அதன் விலையில் 13 சதவீத தொகையை சாலை வரியாக செலுத்த வேண்டும். அதே போல 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை மதிப்பு கொண்ட வாகனங்களுக்கு சாலை வரி 14 சதவீதமாக வசூல் செய்யப்படுகிறது.

10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை மதிப்பு கொண்ட வாகனங்களுக்கு அதன் விலையில் சாலை வரியாக 17 சதவீத தொகையை செலுத்த வேண்டும். 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட வாகனங்களுக்கு அதன் விலையில் 18 சதவீத தொகையை சாலை வரியாக கட்ட வேண்டும். எனவே இந்தியாவிலேயே கர்நாடகாவில் தான் அதிகபட்ச சாலை வரி விதிக்கப்படுகிறது.

இதனால் கார் வாங்குபவர்கள் குறிப்பாக ஆடம்பர கார்களை வாங்குபவர்கள் வரியாகவே பல லட்சங்களை செலுத்த வேண்டும். இந்த காரணத்தினால் கர்நாடகாவை சேர்ந்த பலரும் தங்களுடைய வாகனங்களை குறிப்பாக அதிக விலை கொண்ட வாகனங்களை வெளிமாநிலங்களில் வாங்கி பதிவு செய்துவிட்டு சில காலம் அங்கே பயன்படுத்திவிட்டு பின்னர் முறைகேடாக கர்நாடகாவுக்கு எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர் என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இவ்வாறு நடக்கும் முறைகேடுகளால் கர்நாடகாவுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கர்நாடக அரசை பொருத்தவரை மோட்டார் வாகன வரி மூலம் அதற்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கிறது. எனவே வெளிமாநிலத்தில் வாகனத்தை பதிவு செய்துவிட்டு கர்நாடகாவில் எந்த உரிமமும் பெறாமல் பயன்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கர்நாடக மாநில மோட்டார் வாகன சட்டத்தின் படி வெளிமாநிலங்களில் பதிவு செய்த வாகனங்களை கர்நாடகாவில் பயன்படுத்த சில விதிமுறைகள் இருக்கின்றன. அதாவது வெளிமாநில பதிவு கொண்ட வாகனங்கள் கர்நாடகாவில் 11 மாதங்கள் வரை இலவசமாக பயணித்து கொள்ளலாம். ஆனால் 11 மாதங்களுக்கு மேல் கர்நாடகாவிலேயே அந்த வாகனத்தை பயன்படுத்துகிறார்கள் என்றால் அதனை ஆர்டிஓ அலுவலகம் கொண்டு சென்று பதிவு செய்ய வேண்டும்.

கர்நாடகாவில் பதிவு செய்து கர்நாடக மாநில வாகனமாக மாற்றி விட வேண்டும். இதற்கு அந்த வாகனத்திற்கு பொருந்தும் சாலை வரியை செலுத்த வேண்டும் என்பதே நடைமுறையில் இருக்கும் சட்டம். ஆனால் அங்கே வரி அதிகமாக இருப்பதால் பல உரிமையாளர்கள் வரிகளை செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர்.

தற்போது வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தீவிரமாகி இருப்பதாக கூறும் போக்குவரத்து துறை அதிகாரிகள், வரி ஏய்ப்பு செய்துவிடலாம் என எண்ணுபவர்கள் எங்களிடம் இருந்து தப்ப முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 11 மாதங்களுக்கு மேல் வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை பயன்படுத்துவோர் அதனை கர்நாடக பதிவு கொண்ட வாகனமாக மாற்றி விட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+