கர்நாடக மாநில அரசு 35 லட்சம் ரூபாய் முதல் 45 லட்சம் ரூபாய் வரையிலான வீடுகளுக்கு முத்திரைத் தாள். கட்டணத்தை 3% ஆகக் குறைத்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பெருத்த அடி வாங்கிய துறைகளில் ரியல் எஸ்டேட் துறையும் ஒன்று. குறிப்பாக பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை மோசமான சரிவினைக் கண்டது.
ஏனெனில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அரசு நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்திய நிலையில், பலரும் தங்கள் வருவாய் ஆதாரங்களை இழந்தனர். பலர் வேலைகளை இழந்தனர். இதனால் வங்கிகளில் செலுத்தkகூடிய நிலுவையினை செலுத்த முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் அத்தியாவசியம் தவிர மற்றவற்றிற்கு செலவு செய்வதனை குறைத்தனர். இதனால் ரியல் எஸ்டேட் துறை மோசமாக வீழ்ச்சி கண்டது.
முத்திரைத் தாள் கட்டணம் குறைப்பு
இதற்கிடையில் முடங்கிபோன பொருளாதாரத்தினை மீட்டெடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநில தற்போது ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் விதமாகவும், வீடு விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும் முத்திரைத்தாள் கட்டணத்தினை குறைத்துள்ளது.
நீண்டநாள் கோரிக்கை
இது குறித்து கட்டுமான நிறுவனங்களும் தொடர்ந்து, ரியல் எஸ்டேட் துறையை மீட்டெடுக்க முத்திரைத் தாள் கட்டணத்தினை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பின.
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் முத்திரைத்தாள் கட்டணம் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது. அதாவது ஏற்கனவே முத்திரைத்தாள் கட்டணம் 5% ஆக இருந்த நிலையில், ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை நடைபெறும் விற்பனைகளுக்கு முத்திரைத்தாள் விற்பனை 2% ஆக குறைக்கப்பட்டது.
எவ்வளவு குறைப்பு?
இதனையடுத்து இன்று கர்நாடகா மாநிலத்தில் அம்மாநில முதல்வரும் நிதித்துறை அமைச்சருமான எடியூரப்பா இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் போலவே 35 - 45 லட்சம் ரூபாய் வரையிலான வீடுகள் விற்பனைக்கான முத்திரைத்தாள் கட்டணம் 5% இருந்து 3% ஆகக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
எந்தளவுக்கு கைகொடுக்கும்?
இந்த அறிவிப்பு பலருக்கும் இதன் மூலம் கட்டுமான தொழில்களுக்கு நல்ல முன்னேற்றத்தை அளிப்பது போல் தோன்றலாம். ஆனால் அது உண்மை அல்ல, ஏனெனில் மகாராஷ்டிராவில் அனைத்து விலை உள்ள வீடுகளுக்கும் இந்த முத்திரைத்தாள் கட்டணக் குறைக்கப்பட்டது. ஆனால் பெங்களுருவில் ஒரு தரப்புக்கு மட்டும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த அறிவிப்பு எந்தளவுக்கு கைகொடுக்கும் என தெரியவில்லை என நிபுணர்கள் தரப்பில் கூறுகின்றனர்.