இந்தியாவின் ஸ்டார்ட்அப் ஹப் என்றால் பெங்களூரு என்ற சொல்லும் அளவிற்குப் பல ஆயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளது. இன்று மும்பை பங்குச்சந்தையை ஐபிஓ மூலம் கலக்க வரும் பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்குபவை தான்.
அந்த வகையில் இந்த ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தைப் பெங்களூரை மட்டும் மையப்படுத்தி இருக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் கர்நாடக அரசு புதிதாக ஒரு திட்டத்தை வகுத்து வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
கர்நாடக அரசு
கர்நாடக அரசின் கர்நாடகா டிஜிட்டல் எகானமி மிஷன் கீழ் வெள்ளிக்கிழமை 'Beyond Bengaluru Startup Grid' என்ற திட்டத்தை முன்வைத்துப் பெங்களூரில் இருக்கும் ஸ்டார்ட்அப் கலாச்சாரம் மற்றும் வாய்ப்புகளை மங்களூர், மைசூர், ஹூப்ளி ஆகிய நகரங்களுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.
மங்களூர், மைசூர், ஹூப்ளி
கர்நாடக அரசு தற்போது அறிவித்துள்ள திட்டத்தின் மூலம் மங்களூர், மைசூர், ஹூப்ளி ஆகிய பகுதிகளில் உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நெட்வொர்க், சந்தை வாய்ப்புகள், மென்டார்ஷிப் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கிக்கொடுப்பதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைய முடியும் என நம்புகிறது.
கர்நாடகா டிஜிட்டல் எகானமி மிஷன்
கர்நாடகா டிஜிட்டல் எகானமி மிஷன் மூலம் எதிர்காலத் தேவைக்கு ஏற்க திறன் வாய்ந்த ஊழியர்களையும் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இப்புதிய ஸ்டார்ட்அப் கிளஸ்டர் மூலம் 5000 புதிய நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்கி அதன் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் 10 பில்லியன் டாலர் அளவிலான ஏற்றுமதி வர்த்தகத்தை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
2ஆம், 3ஆம் தர நகரங்கள்
இந்தியாவில் பல முன்னணி மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகரித்து வரும் நகரத்து விலைவாசியைக் கருத்தில் கொண்டு 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
ஐபிஎம் கார்ப்
சமீபத்தில் ஐபிஎம் கார்ப் 250 ஊழியர்களுடனும், க்ளோடச் 300 ஊழியர்களுடன் குளோபல் டெலிவரி சென்டரை மைசூரில் அமைத்துள்ளது. இதேபோல் ஐமெரிட் என்னும் நிறுவனம் 150 ஊழியர்கள் உடன் ஹூப்ளி-யில் அலுவலகத்தை அமைத்துள்ளது.
திருச்சி, கோவை, மதுரை, சேலம்
தமிழ்நாட்டிலும் இதேபோன்ற திட்டத்தைக் கொண்டு வந்தால் திருச்சி, கோவை, மதுரை, சேலம் ஆகிய பகுதிகளில் அதிகப்படியான நிறுவனங்களையும் திறன் வாய்ந்த ஊழியர்களையும் உருவாக்க முடியும். இதேபோல் தமிழ்நாட்டில் படித்த மற்றும் திறன் வாய்ந்த ஊழியர்களுக்குப் பஞ்சம் இல்லை என்பதால் குறைந்த காலகட்டத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தை உருவாக்க முடியும்.