கர்நாடக மாநிலத்தில் திரையரங்குகளில் டிக்கெட் விலையை குறைத்து மக்கள் திரைப்படத்தை அதிகம் பார்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அம்மாநில முதல்வர் சித்தராமையா திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விலையை அதிகபட்சமாக ரூ.200 ஆக நிர்ணயக்கும் கொள்கையை அறிவித்தார். சித்தராமையா முந்தைய ஆட்சியிலும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்த நிலையில் தோல்வியில் முடிந்தது. ஆனால் இந்த முறை அதிரடியாக அறிவிக்கப்பட்டு தற்போது மக்களின் கருத்து கேட்டும் நிலைக்கு இந்த கொள்கை வந்துள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் தலைநகர பெங்களூர் முதல் அனைத்து நகரங்களிலும்ஸ அனைத்து வகையான திரையரங்கங்களிலும், மொழிகளிலும், திரை வடிவங்களிலும் (IMAX, 4DX உட்பட) டிக்கெட் விலையை ரூ.200-ஆக குறைக்கப்படும். இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்து மூலம் எதிர்காலத்தில் சினிமா திரையரங்கம் வர்த்தகம் எப்படி இருக்கும் என்பது தான் தற்போதைய பேச்சு பொருளாக உள்ளது.

டிக்கெட் விலை குறைப்பு: பொதுமக்களுக்கு நன்மையா?
திரையரங்க டிக்கெட் விலைகள் கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வருவதால், ஒரு குடும்பம் வார இறுதியில் மாலில் உள்ள திரையரங்கத்தில் படம் பார்க்க என்றால் குறைந்தது ரூ.2000 முதல் ரூ.3000 வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதில் டிக்கெட், உணவு மற்றும் பார்க்கிங் கட்டணம் அடங்கும்.
இந்நிலையில், டிக்கெட் விலையை ரூ.200-ஆக குறைத்தால், இது பொதுமக்களுக்கு திரைப்படங்களை தியேட்டரில் கண்டு களிக்க முடியும். இதேபோல் தியேட்டருக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும், இதனால் கட்டண குறைப்பு மூலம் ஏற்படும் பாதிப்பை எளிதாக ஈடு செய்ய முடியும் என அரசு தரப்பில் விளக்கம் கொடுகிறது. ஆனால் மல்டிபிளெக்ஸ்-ன் கதை வேறு விதமாக உள்ளது.

மல்டிபிளெக்ஸ்களுக்கு புதிய சவால்:
இந்த டிக்கெட் விலை குறைப்பது என்பது மல்டிபிளெக்ஸ் திரையரங்கங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தொழில்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மல்டிபிளெக்ஸ்கள் தங்களது வருமானத்தை டிக்கெட் விற்பனை, உணவு விற்பனை, விளம்பரம் மற்றும் வாடகையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கின்றன.
டிக்கெட் விலையை உயர்த்தி, பிரீமியம் திரைகளை (IMAX, 4DX, ரிக்ளைனர் சீட்ஸ்) வழங்குவதன் மூலம் அவை லாபம் சம்பாதித்து வருகின்றன. இதேபோல் பெங்களூருவில் இந்த பிரீமியம் திரைகளுக்கு ரூ.600 அல்லது அதற்கு மேல் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ரூ.200 என்ற குறைத்தால் உயர்தர சேவையை அளிப்பதும், இத்தகைய ஆடம்பர தியேட்டர்களையும் இயக்குவது சாத்தியமற்றதாக ஆக்கும் என மல்டிபிளெக்ஸ் புலம்புகிறது.
ஏற்கனவே மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் பாப்கார்ன் முதல் அனைத்து உணவு பொருட்களும் அதிகப்படியான விலையில் விற்கப்படும் வேளையில், டிக்கெட் விலை குறைப்பை மற்ற விஷயத்தில் ஈடு செய்ய முடியாத நிலையில் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் உள்ளது.

PVR-Inox-க்கு பெரும் பாதிப்பு:
இந்தியாவின் மிகப்பெரிய மல்டிபிளெக்ஸ் நிறுவனமாக விளங்கும் PVR-Inox-க்கு இந்த விலை குறைப்பு மூலம் பெரிய அளவில் பாதிக்க உள்ளதாக தெரிகிறது. கர்நாடகா மாநிலத்தில் PVR-Inox-ன் மொத்த திரைகளில் 12% மேல் உள்ளன, மேலும் பாக்ஸ் ஆபிஸ் வருமானத்தில் 10% கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் வருகிறது.
தற்போது PVR-Inox-ல் கர்நாடக மாநிலம் முழுவதும் சராசரி டிக்கெட் விலை ரூ.260-ஆக உள்ள நிலையில், ரூ.200 என்ற குறைக்கப்பட்டால் சுமார் 30% வரை வருமானம் குறையும். இது PVR-Inox-க்கு பெரும் பாதிப்பாக விளங்குகிறது.

தொழிலுக்கு நீண்டகால அபாயம்:
இந்த விலை குறைப்பு கர்நாடக மாநிலத்தில் மல்டிபிளெக்ஸ்களின் வளர்ச்சி பாதிக்கும் என்று Elara Securities-ன் கரன் தெரிவித்துள்ளார். குறைந்த லாபம் கிடைக்கும் காரணத்தால் புதிய தியேட்டர்களை திறப்பது மட்டும் அல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் பிரீமியம் திரைகளை அறிமுகம் செய்வதும் தடைப்படலாம் என சந்தை கணிப்புகள் கூறுகிறது.
மேலும் புதிய மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் திறப்பது குறைந்தால் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படும், இத்துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படலாம். மல்டிபிளெக்ஸ் மாடலில் லாபம் குறைந்து நிலைமை மோசமாகும் பட்சத்தில் பல திரையரங்கம் மூடப்படவும் வாய்ப்புகள் உள்ளது.
கர்நாடக அரசின் டிக்கெட் விலை குறைப்பு பொதுமக்களுக்கு படங்களை ரசிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றாலும், PVR-Inox போன்ற மல்டிபிளெக்ஸ் நிறுவனங்களின் வருமானம் குறையும். இந்த நிலையில் தான் இந்த முடிவு குறித்து மக்களின் கருத்துக்களை அரசு கேட்டு வருகிறது. இறுதி முடிவு விரைவில் கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு அறிவிக்கும்.


Click it and Unblock the Notifications