மார்ச் 18ஆம் தேதி வெளியாகும் தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பல வளர்ச்சி மற்றும் வருவாய் ஈட்டும் திட்டங்கள் இருக்கும் என அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்பார்க்கப்படும் நிலையில் கரூர் மக்களின் முக்கியமான கோரிக்கை தமிழக அரசின் விவசாயப் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறுமா என் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள வெற்றிலை விவசாயிகள் வரவிருக்கும் விவசாயப் பட்ஜெட் அறிக்கையில் அம்மாநிலத்தில் வெற்றிலை ஆராய்ச்சி அமைப்பு-ஐ நிறுவுவது குறித்த அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
கரூர்
கரூர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய வெற்றிலை சாகுப்படி செய்யும் பகுதிகளில் ஒன்றாகும், கரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வேலாயுதம்பாளையம், புகளூர், லாலாப்பேட்டை, மாயனூர், மகாதானபுரம், திருக்காம்புலியூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 3,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது.
வெற்றிலை ஆராய்ச்சி அமைப்பு
சமீபகாலமாக இந்தியாவில் வெற்றிலை நுகர்வு குறைந்து வருவதாலும், வெற்றிலை பயிர்களைப் பல்வேறு நோய்களால் பாதிக்கும் காரணத்தால் இப்பிரிவு விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் வெற்றிலை விவசாயிகளைக் காப்பாற்றவும், வெற்றிலை சாகுபடியை மேம்படுத்தவும் வெற்றிலை ஆராய்ச்சி அமைப்பு அமைக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மதிப்பு கூட்டுப் பொருட்கள்
இந்த ஆராய்ச்சி அமைப்பு மூலம் வெற்றிலை-ஐ மருத்துவ ரீதியில் அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்கும் முறைகளையும், மதிப்பு கூட்டுப் பொருட்களை அதிகளவில் உருவாக்கவும் பயன்படுத்த முடியும் என இப்பகுதி விவசாயிகளும், வெற்றிலை விவசாய அமைப்புகளும் நம்புகிறது.
வெற்றிலை விலை
வெல்ல பச்சைக்கொடி ரகம் ஒரு லோடு 5,500 ரூபாய்க்கும், கற்பூரிகள் 4,500 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஒரு லோடு என்றால் 104 கொத்துகள், இதில் ஒவ்வொரு கொத்தும் 120 வெற்றிலைகள் இருக்கும். இது லாக்டவுன்-க்கு முன் இருந்த விலை நிலவரம். இப்போது 3,500 மற்றும் 2,500 க்கும் குறைந்துள்ளது.
முக ஸ்டாலின்
2021ஆம் ஆண்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது முக ஸ்டாலின் கரூர் வெற்றிலை விவசாயிகளைச் சந்தித்த போது இப்பகுதியில் கட்டாயம் வெற்றிலை ஆராய்ச்சி அமைப்பு நிறுவ உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து வெற்றிலை விவசாய அமைப்புகளும் கோரிக்கை வைத்துள்ள நிலையில் விவசாயப் பட்ஜெட்டில் இடம்பெறுமா என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.