முதலமைச்சர் விஜய்-இன் கரூர் பயணம் தான் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக கூட்டத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது நிகழ்ந்து கிட்டதட்ட 9 மாதங்களுக்கு பின்னர் விஜய் கரூர் சென்றிருக்கிறார்.
முதலமைச்சர் விஜயின் வருகைக்காக கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மீண்டும் ஒரு கூட்ட நெரிசல் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் தன்னுடைய கரூர் பயணத்தின் ஒரு பகுதியாக கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான ஆணைகளை வழங்க இருக்கிறார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்க பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன. கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது அரசு வேலை தருவது நியாயமில்லை என்பது எதிர்கட்சிகளின் வாதம்.
இந்த வழக்கு காலை 11 மணி அளவில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சர் விஜய் அரசு பணி நியமன ஆணைகளை வழங்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் வாதிட்டனர். அப்போது நீதிபதிகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி போல கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்படுவதில் என்ன தவறு என கேள்வி எழுப்பினர். அப்போது சிபிஐ விசாரணை நடந்து வருவதால் அரசு பணி வழங்குவது விசாரணை போக்கை மாற்றலாம் என கூறிய மனுதாரர்கள், ஏற்கனவே தமிழ்நாட்டில் நடந்த தர்மபுரி பேருந்து தீ வைப்பு, மகாமகம் கூட்ட நெரிசல் போன்றவற்றில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எல்லாம் இது போல அரசு பணி வழங்கவில்லையே என வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு பணி வழங்க தடையில்லை என இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் இது தற்காலிக பணியாகவே இருக்க வேண்டும் என கூறியுள்ளனர். இன்று வழங்கப்படுவது, தற்காலிக பணி நியமன ஆணையாக மட்டுமே இருக்க வேண்டும், இந்த வழக்கு முடியும்வரை இப்படியே தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் பணி நியமனங்கள் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
முன்னதாக இந்த பணி நியமனம் போட்டித் தேர்வர்களுக்கு பாதிப்பை உண்டாகும் என்று வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் டிஎன்பிஎஸ்சியை எதிர்மனுதாரராக சேர்த்து ஜூலை 21 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து முதலமைச்சர் விஜய் ,கரூர் நெரிசலில் இறந்த 32 பேர் குடும்பத்திற்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்குவது உறுதியாகிவிட்டது. இருந்தாலும் இது நிரந்தர பணி நியமன ஆணைகளாக இல்லாமல் தற்காலிக பணி நியமன ஆணைகளாகவே இருக்கும் நீதிமன்ற தீர்ப்பினை பொறுத்து பின்னாளில் மாறலாம்.


Click it and Unblock the Notifications

