தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் முக்கியமான வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி கொரோனா பாதிப்பு நிறைந்த இந்தக் கொரோனா காலகட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் லாபத்தில் சுமார் 81 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கரூர் வைஸ்யா வங்கியின் சக தமிழ்நாட்டு வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி பல்வேறு நிர்வாகச் சிக்கல்களில் மூழ்கியிருக்கும் வேளையில், இவ்வங்கியின் லாப வளர்ச்சி முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
கரூர் வைஸ்யா வங்கி லாபத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைக் காண என்ன காரணம் தெரியுமா..?
81% லாப வளர்ச்சி
2019-20ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் கரூர் வைஸ்யா வங்கி வெறும் 63.33 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்ற நிலையில், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டின் லாபம் 81 சதவீதம் வரையில் உயர்ந்து 114.89 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
வருமானம்
கரூர் வைஸ்யா வங்கியின் லாபம் அதிகரித்து இருந்தாலும் இவ்வங்கியின் வருமானத்தின் அளவு கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 1,815.24 கோடி ரூபாயில் இருந்து 1,666.26 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இக்காலகட்டத்தில் கரூர் வைஸ்யா வங்கியின் வட்டி வருமானம்1,537.51 கோடி ரூபாயில் இருந்து 1,394.70 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் வட்டி வருமானத்தில் 9.3 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
வராக் கடன்
இதேபோல் இக்காலகட்டத்தில் கரூர் வைஸ்யா வங்கியின் வராக்கடன் அளவீடு 8.89 சதவீதத்தில் இருந்து 7.93 சதவீதமாகக் குறைந்துள்ளது. கொரோனா காலத்தில் வங்கிகளின் வராக் கடன் அளவீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரூர் வைஸ்யா வங்கியின் வராக் கடன் அளவீடு குறைந்துள்ளது முதலீட்டாளர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது.
இதன் மூலம் இவ்வங்கியின் மொத்த வராக்கடன் அளவு 4,391.03 கோடி ரூபாயில் இருந்து 3,998.43 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு உள்ள இந்தக் காலகட்டத்தில் வங்கியில் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதாகவும், கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளக் கூடுதலாக 95.28 கோடி ரூபாய் அளவிலான நிதியை வங்கி அமைப்பிற்குள் உட்செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பங்கு மதிப்பு
கரூர் வைஸ்யா வங்கியின் லாப அளவீட்டில் ஏற்பட்ட வளர்ச்சி முதலீட்டாளர்களைக் கவர்ந்துள்ள காரணத்தால் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இவ்வங்கியின் பங்கு மதிப்பு இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் 2.70 சதவீதம் வரையில் அதிகரித்து ஒரு பங்கு விலை 32.30 ரூபாய்க்கு வர்த்தகமானது.
மேலும் திங்கட்கிழமை வர்த்தகத்திலும் கணிசமான உயர்வைக் கரூர் வைஸ்யா வங்கி பங்குகள் எதிர்கொள்ளும் எனக் கணிக்கப்படுகிறது.