மும்பை: இந்தியாவின் மிக ஸ்டாக் புரோக்கிங் நிறுவனமான கார்வி ஸ்டாக் புரோக்கிங் விவகாரம், தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
சுமார் 2,௦௦௦ கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி நடந்ததன் காரணமாக இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA) கடந்த வெள்ளிக்கிழமையன்று, கார்வி ஸ்டாக் ப்ரோகிங்க்கிற்கு இடைகால தடை விதித்துள்ளது.
இதன்படி, வாடிக்கையாளர்களின் பணத்தை வைத்து பங்குகளை வர்த்தகம் செய்யவோ அல்லது புதிய வாடிக்கையாளர்களை இணைக்கவும் கூடாது என செபி, கார்வி ஸ்டாக் புரோக்கிங்கிற்கு கட்டளை இட்டுள்ளது.
இதைத் தவிர, கார்வி பிறரிடமிருந்து அங்கீகாரம் பெற்ற உத்தரவுகளை (Power of Attorney) பங்கு களஞ்சியங்கள் (Depositories : NSDL மற்றும் CDSL), செயல் படுத்தக்கூடாது எனவும் ஆணை பிறப்பித்துள்ளது.
தனது முதல்கட்ட விசாரணைக்குப் பின்னரே தேசிய பங்கு சந்தை பல முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. முதல்கட்ட அறிக்கையில் கார்வி ஸ்டாக் ப்ரோகிங் அதன் வாடிக்கையாளர்களுக்கு உரிமையான 1,096 கோடி ரூபாயை தன் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான கார்வி ரீயால்ட்டிக்கு மாற்றியுள்ளது எனவும் தேசிய பங்கு சந்தை கூறியுள்ளது. இந்த பரிவர்த்தனைகள் எல்லாம் ஏப்ரல் 2016 முதல் அக்டோபர் 2019-க்கும் இடையில் நடந்த மோசடிகள் எனவும் கூறப்படுகிறது.
மேலும் ஜூன் 2019 முதல் பரிவர்த்தனை செய்யாத 291 வாடிக்கையாளர்களின் ரூ.116 கோடிகள் மதிப்புள்ள பங்குகளையும் தன் சொந்த கணக்கிற்கு மாற்றி விட்டது, எனவும் தேசிய பங்கு சந்தை தன் விசாரணையில் கண்டு பிடித்துள்ளது. இதனை தவிர மேலும் பல முறைகேடுகளில் கார்வி ஸ்டாக் புரோக்கிங் ஈடுப்பட்டுள்ளதாக என்.எஸ்.இ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் தேசிய பங்கு சந்தையின் தடயவியல் தணிக்கை அறிக்கைக்கு பின்னரே செபி தனது இறுதி உத்தரவை பிறப்பிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒரு புறம் மோசடி நடைபெற்று பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அதை பங்கு சந்தைகள் ஏன் விரைவில் கண்டறியப்படவில்லை. இதன் விளைவாக மக்கள் தங்களது நம்பிக்கையை தான் இழந்து வருகின்றனர். முன்னரே பி.எம்.சி வங்கியில் நடைபெற்ற மோசடியால் நம்பிக்கையை இழந்துள்ள மக்கள், இந்த விஷயத்தில் மேலும் நம்பிக்கையை இழந்துள்ளனர்.