கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் வெள்ளிக்கிழமை அம்மாநில சட்டமன்றத்தில் 2025-26 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தனது உரையில், பொருளாதார சவால்களை வெற்றிகரமாக சமாளித்து, முக்கியமான நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை பாதிக்காமல் செயல்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க அம்சமாக 'கே-ஹோம்ஸ்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளோரின் ஏராளமான வீடுகள் காலியாக உள்ள நிலையில், அவற்றை பயன்படுத்தி சுற்றுலா தங்குமிடங்களாக மாற்றும் திட்டம் இது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

'கே-ஹோம்ஸ்' திட்டம் மூலம், வெளிநாடுகளில் வெற்றிகரமாக செயல்படும் திட்டங்களை அடிப்படையாக கொண்டு இதை உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் மூலம் குறைந்த விலையில் தங்குமிட வசதிகளை வழங்க முடியும். இதன் மூலம் வீட்டு உரிமையாளர்களுக்கு வருமான வாய்ப்பு கிடைப்பதோடு, காலியாக உள்ள வீடுகளின் பராமரிப்பும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
முதற்கட்டமாக, கொச்சி, குமரகம், கொல்லம், முன்னார் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களுக்கு 10 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பைலட் திட்டத்தின் வெற்றியை மதிப்பீடு செய்த பின்னர், கேரளாவின் பிற பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
'கே-ஹோம்ஸ்' திட்டத்துக்காக, முதற்கட்டமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு, சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு அரசு தரும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.


Click it and Unblock the Notifications