இந்தியா இன்று உலக நிறுவனங்கள் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரிய வியாபார சந்தை. உலகமயமாக்கல் வந்த பின் உலகமே ஒரு பெரிய சந்தை தான் என்றாகிவிட்டது.
இந்த சந்தையில் நீச்சல் போட்டு மீன் பிடிப்பது போல, இந்தியாவில் களம் இறங்கி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள், தனியார் கம்பெனிகள். இதில் உள் நாட்டு கம்பெனிகள், வெளிநாட்டு கம்பெனிகள் என பாரபட்சமே இருப்பதில்லை.
அப்படி சில ஆண்டுகளுக்கு முன் கம்பெனியைத் தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு மாடல் காரை களம் இறக்கி இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய கார் கம்பெனியாக வளம் வருகிறார்கள் என்றால் நம்புவீர்களா..?
கியா மோட்டார்ஸ்
ஆம், அப்படி ஒரு நிறுவனம் இருக்கிறது என்றால் அது கியா மோட்டார்ஸ் தான். கியா மோட்டார்ஸின் அந்த எலி போன்ற ஒரு ஜீவ ராசி உடன், பாலிவுட் நடிகர் டைகர் ஸ்ராஃப் வரும் விளம்பரம் இப்போதும் இணையத்தில் பிரபலம். கியா மோட்டார்ஸ் இந்த காரை களத்தில் இறக்கி சுமாராக இரண்டு மாதங்கள் தான் இருக்கும் அதற்குள் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது.
செல்டாஸ்
ஹியூண்டாயின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸின் செல்டாஸ் ரக கார்கள் ஒரு மிட் எஸ் யூ வி ரக கார்கள். கடந்த இரண்டு மாத காலத்தில் மட்டும் கியா மோட்டார்ஸ் சுமாராக 26,800 கார்களை விற்று இருக்கிறார்கள். கடந்த அக்டோபர் 2019-ல் மட்டும் 12,859 கார்களை விற்று இருக்கிறார்கள்.
அதிகம்
கடந்த அக்டோபர் 2019-ல் தென் கொரியாவின் கியா மோட்டார்ஸ் செய்த விற்பனை, ஏற்கனவே இந்தியாவில் பல ஆண்டு காலம் கடை விரித்து வைத்திருக்கும் ஃபோர்ட், ஃபோக்ஸ்வேகன், நிஸான், ரெனால்ட் போன்ற நிறுவனங்களை விட அதிகம் என்பது தான் ஒரு பெரிய ஆச்சர்யத் தகவல். இப்படி தொடங்கிய சில மாதங்களை தங்களை விட அதிகமாக வியாபாரம் செய்தால் இவர்கள் எல்லாம் பயப்படாமல் என்ன செய்வார்கள்..?
ஆந்திரா ஆலை
தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம், ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் நகரத்தில் உருவாக்கி இருக்கும் கார் உற்பத்தி ஆலையில், ஆண்டுக்கு சுமாராக மூன்று லட்சம் கார்களைத் தயாரிக்க முடியுமாம். இப்போது இந்த ஆலையில் இரண்டாவது ஷிஃப்ட் தொடங்கி கார் உற்பத்தியைச் செய்து வருகிறார்களாம். ஏன் இப்போது இரண்டாவது ஷிஃப்ட்..?
ஆர்டர் எவ்வளவு
இந்தியாவில் இருக்கும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு மட்டும், சுமாராக 60,000 செல்டாஸ் கார்கள் புக் செய்யப்பட்டு இருக்கிறதாம். இந்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் செய்து முடிக்கத் தான் இப்போது இரண்டாவது ஷிஃப்ட் போட்டு உற்பத்தி வேலைகளைச் செய்து வருகிறார்களாம். செல்டாஸ் ரக கார்களுக்கான புக்கிங்களை மேற்கொண்டு வாங்கவும் தயாராக இருக்கிறார்களாம்.
கியாவின் திட்டம்
கியா மோட்டார்ஸ் நிறுவனம், உலகப் புகழ் ஹியூண்டாயின் துணை நிறுவனம் தான். இவர்கள் இந்தியாவில் வியாபாரம் செய்ய மட்டும் சுமாராக 1 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்து இருக்கிறார்கள். இந்தியாவின் 160 நகரங்களில் 265 டீலர்கள் மற்றும் சேவை மையங்களை நிறுவ திட்டம் தீட்டி இருக்கிறார்கள். ஆண்டுக்கு 3,00,000 வாகனங்களை விற்கவும் இலக்கு நிர்ணயித்து வெறி கொண்டு உழைத்து வருகிறார்கள். இன்னும் கியா மோட்டார்ஸ் யாருக்கு எல்லாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.