இந்திய ஆட்டோமொபைல் துறை மேசமான நிலையில் இருக்கும் போது தென்கொரியா கார் நிறுவனமான கியா மோட்டார்ஸ் புதிய காரை அறிமுகம் செய்து மக்கள் மனதில் இடம்பிடித்தது மட்டும் அல்லாமல் வர்த்தகத்திலும் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்தது. இன்றும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் காரை வாங்க பல ஆயிரம் பேர் புக்கிங் செய்துள்ளனர்.
இந்நிலையில் 2 வருடங்களுக்கு முன்பாக ஆந்திராவில் புதிதாகக் கட்டப்பட்ட கார் தயாரிப்பு தொழிற்சாலையைத் தற்போது தமிழ்நாட்டிற்கு மாற்ற வேண்டும் எனக் கியா மோட்டார்ஸ் அவசர அவசரமாக ஆலோசனை செய்து வருகிறது.
ஏன்..? என்ன பிரச்சனை..? வாங்க பார்ப்போம்..
ஆந்திர தொழிற்சாலை
ஆந்திராவில் சுமார் 1.1 பில்லியன் டாலர் முதலீட்டில் 2017ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் திறக்கப்பட்ட கியா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் வருடத்திற்கு 3,00,000 கார்களைத் தயாரிக்க முடியும். இதுபோல் இத்தொழிற்சாலையில் சுமார் 12,000 வேலைவாய்ப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் உருவாக்கப்படுவதாக அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயடு தெரிவித்தார்.
எல்லாம் நன்றாக இருந்த நிலையில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதிவியேற்றிய நாள் முதல் மக்களுக்குப் பல நல்ல திட்டங்களையும், பல புதிய விதிமுறைகளையும் அறிவித்து வருகிறார். இந்தப் புதிய விதிமுறையில் தான் கியா மோட்டார்ஸ் சிக்கிக் கொண்டது.
கியா மோட்டார்ஸ்
ஆந்திர தொழிற்சாலையை வைத்து இந்திய தேவைக்கு மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சந்தைக்குத் தேவைப்படும் கார்களையும் கியா மோட்டார்ஸ் திட்டமிட்டு வந்த நிலையில், தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேலைவாய்ப்பு குறித்துப் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
வேலைவாய்ப்பு விதிமுறை
ஆந்திராவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் 75 சதவீத வேலைவாய்ப்பை ஆந்திர மக்களுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.
இது கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்குப் பெரிய பிரச்சனையாக விளங்குகிறது. காரணம் ஆந்திராவில் தன் நிறுவனத்திற்குத் தேவையான திறன் கொண்ட ஊழியர்கள் மிகப்பெரிய தட்டுப்பாடு நிலவுவதாகக் கியா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
இதனால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் இதயமாகச் செயல்படும் தமிழ்நாட்டிற்குக் கியா மோட்டார்ஸ் தொழிற்சாலையை மாற்ற திட்டமிட்டு வருகிறது. இதற்காகத் தமிழ்நாட்டில் இருந்து கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு உதிரிப் பாகம் சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டிற்குத் தொழிற்சாலையை மாற்றினால் போக்குவரத்து செலவும் அதிகளவில் குறையும் என்பது கியா மோட்டார்ஸின் மற்றொரு கருத்தாக உள்ளது.
கூடுதல் நெருக்கடி
இதுமட்டும் அல்லாமல் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முந்தைய ஆட்சி காலத்தில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகை ஒப்பந்தகளை மீண்டும் ஆய்வு செய்து தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனவும் ஜெகன் உத்தரவிட்டுள்ளார்.
மின்சாரம், நிலம்
கியா மோட்டார்ஸ் ஆந்திராவில் தொழிற்சாலை அமைக்க மின்சாரக் கட்டணத்தில் சலுகை, நிலம் கொடுக்கப்பட்டதில் சில நிதி சலுகை ஆகியவற்றை முந்தைய சந்திரபாபு நாயடு அரசு கொடுத்துள்ளது.
இதிலும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்குப் பிரச்சனை வரும் என எதிர்பார்க்கப்படுவதால் உற்பத்தி பாதிக்காத வகையில் சென்னைக்குத் தொழிற்சாலையை மாற்றிவிடலாம் என இந்நிறுவனம் திட்டமிடுகிறது.
பேச்சுவார்த்தை
இதுக்குறித்து முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடந்த கியா மோட்டார்ஸ் முடிவு செய்து அடுத்த வாரம் ஜெகன் மோகன் ரெட்டி-யை சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கியுள்ளது.
மறுபுறம் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைப்பதற்காகவும் பேச்சுவார்த்தையும் கியா மோட்டார்ஸ் ரகசியமாக நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.