கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் தென் கொரியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய தொழிற்சாலை ஆந்திராவில் கடந்த டிசம்பர் மாதமே தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திராவிலிருந்து, தமிழகத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் ஆந்திர அரசும் சரி, கியா மோட்டார்ஸ் நிறுவனமும் இதை மறுத்துள்ளன. மேலும் இந்த செய்தியானது ஆதாரமற்றவை என்றும் தெரிவித்துள்ளன.
வலுவான கூட்டாண்மை
இது குறித்து வெளியாக செய்தியில், இது முற்றிலும் ஆதாரமற்ற கதை, ஏனெனில் கியா மோட்டார்ஸ் மற்றும் ஆந்திரா அரசும் வலுவான கூட்டாண்மையுடன் தொடர்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அதற்கு முன்னதாக ஆண்டுக்கு 2 லட்சம் யூனிட்டுகளிலிரிந்து ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்களாக மாநிலத்தில் அதிகரிக்க கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் ஆந்திராவின் கைத் தொழில் மற்றூம் வணிகத் துறையின் சிறப்பு தலைமை செயலாளர் ரஜாத் பார்கவா கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு மாற்றம் இல்லை
முன்னதாக கியா மோட்டார்ஸ் ஆந்திராவின் அனந்தபூரில் இருந்து அண்டை மாநிலமான தமிழ்நாட்டிற்கு மாற்ற திட்டமிட்டதாக செய்திகள் வெளியானது. சுமார் 1.1 பில்லியன் டாலர் முதலீட்டில் கட்டப்பட்ட இந்த ஆலையானது கடந்த டிசம்பரில் தான் திறக்கப்பட்டது. இந்த ஆலைமூலம் சுமார் 12,000 பேர் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் வேலைகளை பெற்று வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
கியா மோட்டார்ஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது
மேலும் ஆந்திர அரசும் தமிழக அரசும் நல்லுறவைக் கொண்டுள்ளன. அவர்கள் கியா மோட்டார்ஸூடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆக இந்த மாநிலங்களுக்கு இடையே எந்தவித விவாதங்களும் நடைபெறவில்லை என்றும் தமிழகத்தின் தொழில் துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக கியா மோட்டார்ஸ் தங்கள் ஆலையை ஆந்திராவிலிருந்து மாற்றுவது குறித்த அறிக்கையை மறுத்ததுடன், ஆந்திராவில் கியா மோட்டார்ஸ் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலீடுகளை ஈர்த்து வருகிறது
வலுவான கொள்கைகள் மூலமாகவும் மற்றும் வெளிப்படையான ஆளுமை மூலமாகவும், மாநிலத்தில் நட்பு சூழலை வளர்ப்பதில் ஆந்திர அரசு உறுதி பூண்டுள்ளது. இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்கான சிறந்த மாநிலங்களில் ஆந்திராவும் இடம் பெற்று வருகிறது. உலகளவில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது என்று பார்கவா கூறியுள்ளார்.