இந்தியாவில் இருக்கும் ஆட்டோமொபைல் உதிரி பாக கம்பெனிகள் தொடங்கி, இரு சக்கர வாகனம், கார், கண ரக வாகனம் வரை எல்லா ஆட்டோமொபைல் கம்பெனிகளும் கடந்த சில மாதங்களாக மிக மோசமான விற்பனையை பதிவு செய்து கொண்டு இருக்கின்றன.
ஆனால் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ராஜா போல, விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்து இருக்கிறது எனச் சொல்கிறது. அடுத்து இத்தனை கார்களை ஏற்றுமதி செய்யவும் இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம் என அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.
யார் அந்த கம்பெனி? செப்டம்பர் 2020 மாதத்தில் எத்தனை வாகனங்களை விற்று இருக்கிறார்கள்? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
இரண்டு மடங்கு வியாபாரம்
கியா மோட்டார்ஸ் (Kia Motors) தான் அந்த அதிர்ஷ்டசாலி கம்பெனி. கியா மோட்டார்ஸ் கம்பெனியின் விற்பனை, கடந்த செப்டம்பர் 2020 மாதத்தில் 18,676 வாகனங்களை விற்று இருக்கிறார்களாம். கடந்த செப்டம்பர் 2019-ல், கியா மோட்டார்ஸ் வெறுமனே 7,554 கார்களை மட்டுமே விற்று இருந்தார்களாம். 147 % விற்பனை அதிகரித்து இருக்கிறது.
கியாவின் Sonet ரக கார்கள்
இந்த திடீர் விற்பனை ஏற்றத்துக்கு, கியாவின் சொனெட் (Sonet) ரக கார்கள் பெரிதும் உதவியதாகச் சொல்லி இருக்கிறது கியா மோட்டார்ஸ். கடந்த செப்டம்பர் 18-ம் தேதி தான் சொனெட் ரக கார் விற்பனைக்கு வந்தது. ஆனால் விற்பனைக்கு வந்த 12 நாட்களுக்குள்ளேயே 9,266 கார்கள் விற்பனை ஆகி இருக்கிறதாம்.
Kookhyun Shim
இந்தியாவில் எதிர்பார்த்ததை விட, ஆட்டோமொபைல் துறை வேகமாக மீண்டு வந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் எங்கள் திட்டப்படி முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் என, கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியா பிரிவின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி கூக்யுன் சிம் (Kookhyun Shim) சொல்லி இருக்கிறார்.
ஏற்றுமதித் திட்டம்
உள் நட்டில் வியாபாரம் செய்வது ஒரு பக்கம் இருக்க, இந்தியாவில் உற்பத்தி செய்து, தன் வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் வேகத்தோடு இருக்கிறது கியா மோட்டார்ஸ். அடுத்த 12 மாதங்களுக்குள், கியா மோட்டார்ஸ், 70 ஏற்றுமதி சந்தைகளில், சுமாராக 50,000 சொனெட் ரக வாகனங்களை விற்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
பண்டிகை காலம்
சோனெட் வாகனங்களை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொண்டது, அதிகரித்து வரும் செல்டாஸ் மற்றும் கார்னிவல் மாடல் கார்களின் விற்பனை போன்றவைகள் எல்லாம், உள் நாட்டில் டிமாண்ட் தேறி வருவதைக் காட்டுகிறது. அடுத்தடுத்து இந்தியாவில் பண்டிகைகள் இருப்பதால், இந்த டிமாண்ட் அதிகரிக்கலாம் என்கிறது கம்பெனி தரப்பு.