இந்திய ஆட்டோமொபைல் சந்தை மோசமான நிலையில் இருக்கும் போதும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் தனது முதல் இந்திய தயாரிப்பை வெளியிட்டு மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்று 4 மாதத்தில் சுமார் 40,000 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கியா மோட்டார்ஸ்-இன் செல்டோஸ் காரின் விற்பனை வளர்ச்சியைக் கண்டு வியக்காத நிறுவனங்களே இல்லை என்ற கூறினாலும் மிகையில்லை.
இந்நிலையில் கியா மோட்டார்ஸ் தனது நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கையை வெளியிட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நவம்பர் மாத விற்பனை
கியா மோட்டார்ஸ் நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 14,005 செல்டோஸ் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது விழாக்காலம் என்றாலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் அறிமுகமாகிய 4 மாதத்தில் தொடர்ந்து விற்பனையில் சாதனை வளர்ச்சியை மட்டுமே கண்டு உள்ளது.
4 மாத வளர்ச்சி
ஆகஸ்ட் 2019இல் அறிமுகம் செய்யப்பட்ட போதே 6,236 கார்களை விற்பனை செய்தது கியா மோட்டார்ஸ், அதன் பிறகு செப்டம்பர் மாதத்தில் 7,754 கார்களையும், ஆக்டோபர் மாதத்தில் 12,854 கார்களையும், நவம்பர் மாதத்தில் 14,005 கார்களையும் விற்று அசத்தியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் கடந்த 3 மாதத்தில் மட்டும் சுமார் 86,840 கார்களுக்கான ஆர்டர்களையும் கியா செல்டோஸ் பெற்றுள்ளது.
4வது இடம்
இந்த அதிரடி விற்பனையின் மூலம் கியா மோட்டார்ஸ் டாடா மோட்டார்ஸ், நிஸ்ஸான் மோட்டார், ஹோண்டா இந்தியா மற்றும் போர்டு இந்தியா ஆகிய நிறுவங்களை ஓரம்கட்டி 4வது பெரிய கார் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.
வாடிக்கையாளர் வெற்றி
கியா மோட்டார்ஸ் மோசமான காலகட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டாலும் வாடிக்கையாளர்கள் பெரிய அளவிலான வெற்றியை அடைந்து விற்பனையில் அசத்துகிறது. இதற்கு முக்கியக் காரணம் இக்காரின் தரம் மற்றும் விலையும் தான்.
கியா மோட்டார்ஸ்-இன் செல்டோஸ் கார் 9.69 லட்சம் முதல் 16.99 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இப்பிரிவில் இருக்கும் மற்ற கார்களை விடவும் பல அதிநவீன வசதிகள் உள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பு வரவேற்பை பெற்றுள்ளது.