கொச்சியில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கனவே சிறப்பாக இயங்கி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளது.
சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது என்பதும் இந்த சேவை பயணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது என்பதும் தெரிந்ததே.
மெட்ரோ ரயில் சேவை மூலம் பயணிகள் போக்குவரத்து பிரச்சனை இன்றி எளிதாக தாங்கள் செல்லும் இடத்திற்கு சென்று வருகின்றனர்.
கொச்சி மெட்ரோ
கேரளாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான கொச்சியில் ஏற்கனவே முதல்கட்ட ரயில் திட்டம் 25.6 கிலோமீட்டரில் 22 ரயில் நிலையங்களுடன் செயல்பட்டு வருகிறது. அலுவா முதல் பேட்டா வரை இயங்கி வரும் இந்த திட்டத்திற்கு ரூபாய் 5,181.79 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில் இதன் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
கொச்சி மெட்ரோ முதல்கட்ட ‘பி’ திட்டம்
அதே போல் கொச்சி மெட்ரோ முதல்கட்ட 'பி' திட்டத்தின் எஸ்என் நிலையம் முதல் திரிபுனித்துரா முனையம் வரை 1.20 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த பகுதியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொச்சி மெட்ரோ 2வது கட்ட திட்டம்
இந்த நிலையில் காக்கநாடு வழியாக ஜேஎல்என் மைதானம் முதல் தகவல் பூங்கா வரையிலான கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் கூடிய நிலையில் கொச்சி மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டமான காக்கநாடு வழியாக ஜேஎல்என் மைதானம் முதல் தகவல் பூங்கா வரையிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.1,957.05 கோடி மதிப்பீடு
இதற்காக ரூ.1,957.05 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற உள்ளதாகவும் 11.17 கிலோமீட்டரில் 11 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வரப்பிரசாதம்
சுமார் மூன்று இலட்சம் மக்கள் வாழும் கொச்சியில் இரண்டாம் கட்ட திட்ட பணிகள் முடிவடைந்தால் அப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.