டெல்லி: இந்தியாவில் தற்போது நீடித்து வரும் மந்த நிலையால், இருக்கும் வேலையே நீடிக்குமா? இல்லையா? எந்த நேரத்தில் பறிபோகும் என்ற நிலை நிலவி வருகிறது.
ஏனெனில் எந்த துறையை எடுத்தாலும், அதில் வீழ்ச்சி, நஷ்டம், உற்பத்தி என பிரச்சனை தலை விரித்தாடி வருகிறது.
இதனால் பல துறைகளில் பல நிறுவனங்கள் பணி நீக்கம், விருப்ப ஓய்வு என நடவடிக்கை எடுத்து வருகிறது. சில பல பெரு நிறுவனங்கள் கூட கடும் நஷ்டத்தில் உள்ளன. ஏன் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் கூட கடும் வீழ்ச்சியில் உள்ளன. அதிலும் ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைக்க அரசு முயன்று வருகிறது. அந்தளவுக்கு இந்தியாவில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகிறது.
சம்பளம் அதிகரிக்கலாம்
ஆனால் கர்நாடகாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கார்ன் ஃபெர்ரி குளோபல் நிறுவனம், இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் வளர்ச்சி 2020ம் ஆண்டில் 9.2 சதவிகிதமக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இது ஆசியாவிலேயே மிக உயர்ந்த சம்பள விகிதம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதே நேரத்தில் பண வீக்கம் ஒரு கெடுபிடியாகக் கூடும் என்றும் கருதப்படுகிறது.
உண்மையான சம்பள விகிதம்
எனினும் நாட்டில் உண்மையான ஊதிய சம்பளம் வெறும் 5 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்ன் ஃபெர்ரி சர்வதேச நிறுவனம், உலகளாவிய சம்பள முன்னறிவிப்பின் படி, 2020ம் ஆண்டிற்கான இந்தியாவின் சம்பள வளர்ச்சி கடந்த ஆண்டு 10 சதவிகிதத்திலிருந்து 9.2 சதவிகிதமாக குறைந்தது. எனினும் பணவீக்கத்தை சரிசெய்த பின் இந்த ஊதிய விகிதம் 5 சதவிகிதமாக மாறக் கூடும் என்றும் கருதப்படுகிறது.
இந்தியா தான் தலைவர்
ஆசியாவிலேயே சம்பள வளர்ச்சி திட்டத்தின் தலைவராக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது. உண்மையான சம்பள விகிதங்களில் இந்தியா வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலை மற்றும் அரசாங்கத்தின் முற்போக்கான சீர்திருத்தங்களுடன் பல துறைகளில் எச்சரிக்கையான நம்பிக்கை உணர்வு உள்ளது.
சம்பளம் உயரும்
இந்த கார்ன் ஃபெர்ரி அறிக்கையின் படி, 2020ம் ஆண்டில் உலகளவில் சம்பளம் 4.9 சதவிகிதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பணவீக்க விகிதம் சுமார் 2.8 சதவிகிதமாக இருக்கும் நிலையில், உண்மையான ஊதிய சம்பள உயர்வு கணிப்பு 2.1 சதவிகிதமாக இருந்தது. இதே 2020ம் ஆண்டில் சம்பளம் 5.3 சதவிகிதமாக உயரும். இதே உண்மையான ஊதிய விகிதம் 3.1 சதவிகிதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே பணவீக்க விகிதம் 2.2 சதவிகிதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திறமைக்கு ஏற்ப சம்பளம்
எனினும் இந்தியாவின் திட்டமிடப்பட்ட சராசரி சம்பள உயர்வு 2020ம் ஆண்டில் 9.2 சதவிகித வளர்ச்சியாக கண்டுள்ளது. குறைந்த பணவீக்கத்துடன் உண்மையான ஊதிய விகிதம் 5.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது உலக அளவில் மிக உயர்ந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பள அதிகரிப்பு விகிதமானது குறைந்த சிறந்த ஊழியர்கள் மற்றும் அதிக திறன் மற்றும் திறமைகளை வேறுபடுத்தி காண்பிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் திறமைக்கு ஏற்ப இந்த சம்பள விகிதம் அதிகரிக்கும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளத்தில் மெதுவான வளர்ச்சி
வணிகங்களில் அதிகரித்து வரும் செலவு அழுத்தங்களால், நிலையான சம்பளம் மெதுவான வளர்ச்சியை காண்கிறது. அதே நேரத்தில் அதிக செயல்திறன் கொண்டவர்கள் குறுகிய மற்றும் நீண்டகால நிலையான வளர்ச்சியைக் காண்பார்கள். ஆசிய நாடுகளில் இந்தோனேசியாவில் சம்பள வளர்ச்சி 8.1% ஆகவும், மலேசியா, சீனா, மற்றும் கொரியா முறையே 5%, 6% மற்றும் 4.1% சம்பள வளர்ச்சியையும் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறைவான வளர்ச்சி காணும் நாடுகள்
இதே ஜப்பான் மற்றும் தைவானில் முறையே 2 சதவிகிதம் மற்றூம் 3.9 சதவிகிதமாக மிகக் குறைந்த சம்பள வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. 130க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 25,000 நிறுவனங்களில் உள்ள 20 மில்லியனுக்கும் அதிகமான வேலைதாரர்களுக்கான தரவைக் கொண்ட கார்ன் ஃபெர்ரி ஊதிய தரவிலிருந்து எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.