இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு கண்டிப்பாகத் தடை விதிக்கப்படமாட்டாது எனக் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் மத்திய அரசும் நிதியமைச்சகமும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை ஒழுங்கு முறைப்படுத்தத் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் எப்போது மத்திய நிதியமைச்சகம் புதிய கிரிப்டோ மசோதா-வை தாக்கல் செய்யும் என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான கோட்டாக் மஹிந்திரா வங்கி முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது.
இந்தியாவில் முன்னணி வங்கிகள் தொடர்ந்து கிரிப்டோ முதலீட்டுக்கும், வர்த்தகத்தில் இருந்தும் விலகி இருக்கும் நிலையில், கோட்டாக் மஹிந்திரா வங்கி இந்தியாவின் மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான WazirX உடன் புதிய வர்த்தகக் கூட்டணியை உருவாக்கியுள்ளது.
கோட்டாக் மஹிந்திரா வங்கியில் WazirX புதிய வங்கி கணக்கை திறந்துள்ளது. இந்தக் கணக்கின் மூலம் WazirX வர்த்தகத் தளத்தின் முதலீட்டாளர்களின் பணத்தைப் பெறவும், திரும்பச் செலுத்துவதற்காகப் பயன்படுத்த உள்ளது. இந்தக் கணக்கு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், தற்போது முக்கிய நிர்வாகப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு WazirX ரிசர்வ் வங்கியின் தடையின் காரணமாக ஐசிஐசிஐ வங்கியில் வைத்திருந்த கணக்கை மூடிவிட்டு மொத்த முதலீட்டாளர்களின் வர்த்தகக் கணக்கை மொபிகுவிக் தளத்திற்கு மாற்றி இதுநாள் வரையில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி தடையை நீக்கிய பின்பு, மத்திய அரசு கிரிப்டோ வர்த்தகச் சந்தையை ஒழுங்குமுறை செய்ய நடவடிக்கை எடுத்துள்ள வேளையில் WazirX கோட்டாக் மஹிந்திரா வங்கியுடன் கூட்டணியைத் துவங்கியுள்ளது.