தனியார் துறையினை சேர்ந்த முன்னணி வங்கியான கோடக் மகேந்திரா வங்கி டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், நிகர லாபம் 16% அதிகரித்து, 1854 கோடி ரூபாயாக லாபம் அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 1,596 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தற்போது இந்த வங்கி பங்கின் விலையானது 39 ரூபாய் குறைந்து ( 2.32 மணியளவில்) 1789 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
இவ்வங்கியின் நிகர வட்டி வருவாயானது 17% அதிகரித்து, 4007 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 3,430 கோடி ரூபாயாக இருந்தது. இதே நிகர வட்டி மார்ஜின் விகிதமானது 4.51% ஆகவும் உள்ளது.
இதே காசா விகிதம் டிசம்பர் 31 நிலவரப்படி, 58.9% ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 53.7% ஆக இருந்தது.
டிசம்பர் 31 நிலவரப்படி, மொத்த வாரக்கடன் மதிப்பு 2.26% ஆகவும், இதே நிகர வாரக்கடன் மதிப்பானது 0.50% ஆகவும் உள்ளது.
எனினும் இவ்வங்கியில் நிகர லாபமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 20% அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டது. அதே போல நிகர வட்டி வருவாயும் 15 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. எதிபார்க்கப்பட்டதை போல நிகரலாபம் இல்லாவிட்டாலும், கிட்டதட்ட இந்த லாபத்தினை இவ்வங்கி எட்டியுள்ளது. அதே போல வட்டி வருவாயும் கணிப்பினை விட அதிகரித்துள்ளது.
இவ்வங்கியில் லாபம் அதிகரித்துள்ள போதிலும் கூட, இவ்வங்கியின் பங்கு விலையானது பலத்த சரிவில் தான் தற்போதுள்ளது. முந்தைய அமர்வில் கோடக் மகேந்திரா வங்கியின் பங்கு விலையானது 1828 ரூபாயாக முடிவுற்றிருந்த நிலையில், இன்று தொடக்கத்திலேயே கேப் ஆகி 1845 ரூபாயாக தொடங்கியது. இது இன்று அதிகபட்சமாக 1867.40 ரூபாய் வரை சென்று பின் திரும்பியுள்ளது. எனினும் இன்றைய குறைந்தபட்ச விலையானது 1775 ரூபாயினையும் தொட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 39 ரூபாய் சரிந்து காணப்படுகிறது.