தனியார் துறையினை சேர்ந்த முன்னணி வங்கியான கோடக் மகேந்திரா வங்கி ஜூன் காலாண்டில் அதன் மொத்த நிகரலாபத்தில் 8.5% வீழ்ச்சி கண்டுள்ளது.
அதன் மொத்த நிகரலாபம் 1,244.45 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 1,360.20 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
அதே போல வருவாயிலும் சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் கடந்த மார்ச் காலாண்டில் பெற்ற லாபத்தினை ஜூன் காலாண்டிலும் கிட்டதட்ட பெற்றுள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் அதன் நிகரலாபம் 1,266.60 கோடி ரூபாயாகும்.
எனினும் இதன் வருவாய் 7,685.40 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 7,944.61 கோடி ரூபாயாக இருந்ததாகவும் பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மொத்த செயல்படாத சொத்துக்கள் ஜூன் காலாண்டில் 2.70% அதிகரித்துள்ளதாக இவ்வங்கி அறிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 2.19% ஆக இருந்துள்ளது. அதோடு மொத்த வாராக்கடன் மதிப்பும் 5,619.33 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 4,613.52 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இதுவே நிகர வாராக்கடன் மதிப்பானது 0.87% அதிகரித்து 1,777.10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்பு 1524.38 கோடி ரூபாயாகவும் இருந்தது.
இதே ஒருங்கிணைந்த அடிப்படையில் கோடக் வங்கியின் நிகர லாபத்தில் 4.1 சதவீதம் குறைந்து 1,852.59 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1,932.21 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இருப்பினும் மொத்த ஒருங்கிணைந்த வருவாய் 12,323.15 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 12,129.56 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலையானது கடன் வணிகத்தினை பெரும் அளவு பாதித்துள்ளது. அதோடு கட்டண வருமானம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்பாடு, வசூல் திறன் உள்ளிட்ட மூன்றாம் தரப்பு வருமானங்கள் கொரோனாவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோடாக் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனாவின் தாக்கம் மேற்கொண்டு நீடிக்கும் பட்சத்தில் அது வங்கித் துறை செயல்பாடுகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தும். வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.