இந்திய டெலிகாம் சந்தையின் கடும் போட்டிக்கு மத்தியில் சிறிதும் பெரிதுமாகப் பல நிறுவனங்கள் மூடப்பட்டும், கைப்பற்றப்பட்டும் தற்போது 95 சதவீத வர்த்தகச் சந்தை மற்றும் வர்த்தகம் வெறும் 3 நிறுவனங்கள் மத்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 3வது இடத்தில் இருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.
இதனால் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரரும், ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவருமான குமார் மங்கலம் பிர்லா, இந்நிறுவனத்தைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யத் தாயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்திய டெலிகாம் சந்தை
இந்திய டெலிகாம் சந்தையின் போட்டியைச் சமாளிக்கத் தனித்தனி நிறுவனமாக இருந்த வோடபோன் மற்றும் ஐடியா ஒன்றாக இணைந்தது, ஆனாலும் ஜியோவின் ஆதிக்கம் மற்றும் அதற்கு ஈடுகொடுக்க தாயாரான ஏர்டெல் நிறுவனத்திற்கு மத்தியில் வோடபோன் ஐடியா போட்டிப்,போட முடியாமல் தவித்து வருகிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம்
இந்த நிலைக்கு மிக முக்கியக் காரணம் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தலையில் இருக்கும் அதிகப்படியான கடன் மற்றும் நிலுவைத் தொகை தான். AGR கட்டண நிலுவை குறித்து நீண்ட காலமாக வழக்கு நடந்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் உடனடியாக அனைத்து நிறுவனங்களையும் கடனை செலுத்த உத்தரவிட்ட காரணத்தால் வோடபோன் ஐடியா நிறுவனம் மாட்டிக்கொண்டு உள்ளது.
குமார் மங்கலம் பிர்லா
இந்த நிலையிலிருந்து நிறுவனத்தைக் காப்பாற்ற எதையும் செய்யத் தாயாராக உள்ளதாக ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரும், வோடபோன் ஐடியாவின் முக்கியப் பங்குதாரருமான குமார் மங்கலம் பிர்லா அறிவித்துள்ளார்.
பிர்லா-வின் கடிதம்
ஜூன் மாதம் குமார் மங்கலம் பிர்லா நாடாளுமன்றத்தின் செயலாளர் ராஜீவ் கப்பா அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கடனில் மூழ்கியிருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தைக் காப்பாற்றவும், தொடர்ந்து இயக்கவும் தன்னிடம் இருக்கும் பங்குகளை அரசுக்கோ அல்லது அரசு கைகாட்டும் நிறுவனத்திற்கோ அளிக்கவும் விற்பனை செய்யவும் தான் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு விற்பனை
இதுமட்டும் அல்லாமல் வோடபோன் ஐடியா தனது பங்குகளைச் சீன டெலிகாம் அல்லது சீன முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டு வருவதாகவும் அதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.
உண்மை உடைத்த பிர்லா
இதற்கு முற்றுப்புள்ளி வகைக்கும் விதிதத்தில் குமார் மங்கலம் பிர்லா நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய கடிதத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் இதுவரை எந்தொரு சீன நிறுவனத்தையும், சீன முதலீட்டாளரையும் அணுகவில்லை. தற்போது முதலீட்டுக்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அனைத்து நிறுவனம் சீனா அல்லாத நாடுகளின் முதலீட்டாளர்கள் தான் எனவும் உண்மை உடைத்துள்ளார். இந்தக் கடிதம் டெலிகாம் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
AGR கட்டண நிலுவை
அரசு தரவுகள் அடிப்படையில் வோடபோன் ஐடியா நிறுவனம் AGR கட்டண நிலுவையாக மட்டுமே சுமார் 58,254 கோடி ரூபாய் அளவிலான தொகையை நிலுவையில் வைத்திருந்தது. இதில் 7,854.37 கோடி ரூபாய் செலுத்திவிட்ட நிலையில், மீதம் 50,399.63 கோடி ரூபாய் இன்னமும் நிலுவையில் உள்ளது.
வோடபோன் ஐடியா தரவுகள்
இதேபோல் வோடபோன் ஐடியா நிறுவன தரவுகள் படிக் குத்தகை கட்டணத்தைத் தவிர்த்து சுமார் 1,80,310 கோடி ரூபாய் கடன் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. எப்படிப் பார்த்தாலும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தை விடவும் பல மடங்கு அதிகக் கடன் மற்றும் நிலுவையை வைத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் அரசு உதவி செய்யவும் தயாராக இல்லை.
குமார் மங்கலம் பிர்லா-வின் 27% பங்குகள்
இதனால் குமார் மங்கலம் பிர்லா தனது கையில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்யத் தயாராகியுள்ளார். வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா டெலிகாம் நிறுவனங்கள் இணைக்கப்பட்ட வோடபோன் ஐடியா கூட்டணி நிறுவனத்தின் பிர்லா சுமார் 27 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இந்தப் பங்குகளைத் தான் தற்போது அரசுக்கு விற்பனை செய்யத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
புதிய முதலீடு திரட்டல்
இதன் பின்பு வோடபோன் ஐடியா நிறுவனம் தனது AGR நிலுவை கட்டணத்தைச் செலுத்த, புதிய முதலீட்டைத் திரட்டி அதன் மூலம் கடன் சுமையைக் குறைக்கலாம் எனத் திட்டமிட்டது. செப்டம்பர் 2020ல் வோடபோன் ஐடியா நிர்வாகமும் 25,000 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்ட ஒப்புதல் அளித்தது.
முதலீட்டாளர்கள்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான வோடபோன் மற்றும் பல முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயாராக இருந்தாலும், அனைவரும் 3 முக்கியமான கோரிக்கை வைத்தனர்.
3 முக்கியமான கோரிக்கை
1. AGR நிலுவைத் தொகையில் தெளிவு, 2. அரசு நிலுவைத் தொகையில் அளிக்கப்படும் சலுகை அளவு, 3. டெலிகாம் கட்டணத்தில் அடிப்படை கட்டண நிர்ணயம் செய்தல். ஆகிய மூன்றுக்கும் பதிலை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
டெலிகாம் கட்டண உயர்த்தல்
அரசின் பதிலுக்குக் காத்திருக்காமல் டெலிகாம் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் கூடுதலான வருமானத்தைப் பெற்று கடன் நிலுவையைக் குறைக்க முயன்றால் தற்போது சந்தையில் இருக்கும் போட்டிக்கு வோடபோன் ஐடியா நிறுவனம் அதிகளவிலான வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடும் என்பதால் கட்டணத்தை உயர்த்தாமல் தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்க முயற்சி செய்து வந்தது.
திவால்
ஆனால் AGR கட்டணம் செலுத்தக் காலம் நெருங்கிவிட்டதாலும், முதலீட்டைத் திரட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது, வோடபோன் ஐடியா நிறுவனம் திவால் ஆகிவிடும். இதைத் தடுக்கவே தற்போது குமார் மங்கலம் பிர்லா தனது பங்குகளை விற்பனை செய்தாவது வோடபோன் ஐடியாவை காப்பாற்ற முடிவு செய்துள்ளார்.