காதி மற்றும் கிராம தொழிற்துறை அமைப்பு இந்திய மக்களுக்குக் காதி பொருட்களைக் கொண்டு சேர்க்கும் விதமாகவும், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் வர்த்தகத் துறையில் கிராம மக்களின் திறன்களைக் கொண்டு செல்லும் முயற்சியாகப் புதிய ஈகாமர்ஸ் தளம் உருவாக்கியுள்ளது.
இந்த ஈகாமர்ஸ் தளத்தில் ஆடை முதல் வீட்டு அலங்கார பொருட்கள் எனச் சுமார் 50,000-திற்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்காகப் பட்டியலிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஊரகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், கிராமம் மற்றும் டவுன் பகுதி மக்களின் திறன் மற்றும் தயாரிப்புகளை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக முதல் முறையாக அரசு ஒரு பிரத்தியேக ஈகாமர்ஸ் தளத்தை உருவாக்கியுள்ளது எனக் காதி மற்றும் கிராம தொழிற்துறை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்கள் மத்தியில் தற்போது எப்போதும் இல்லாத வகையில் காதி மற்றும் கிராமப்புற தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
குறிப்பாக 2018-19 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் காதி பொருட்களின் தேவை சுமார் 25 சதவீதம் அதிகரித்தது எனக் காதி மற்றும் கிராம தொழிற்துறை அமைப்பின் தலைவர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.
காதி மற்றும் கிராமப்புற தயாரிப்புகளுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் பிரத்தியேக தளம் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் பொருட்களையும், ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களையும் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்தத் தளத்தில் ஆடை, மளிகை பொருட்கள், அழகு சாதனங்கள், வீட்டு அலங்கார பொருட்கள், உடல் நலம் மற்றும் ஆரோக்கியப் பொருட்கள், அடிப்படைத் தேவைகள், பரிசுப் பொருட்கள் எனப் பலவும் விற்பனைக்காகப் பட்டியலிடப்பட்டு உள்ளது.
இந்தப் பிரத்தியேக தளத்தில் இணைய முகவரி : https://www.ekhadiindia.com/