வங்கி அல்லாத நிறுவனமான எல்&டி பைனான்ஸ் நிறுவனம் நாளை முதல் உரிமை பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது.
பொறியியல் உள்கட்டமைப்பு துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின், நிதி பிரிவான எல் &டி பைனான்ஸ் மூலம் உரிமை பங்கினை வெளியிட திட்டமிட்டுள்ளது.
அதெல்லாம் சரி உரிமை பங்கு வெளியீடு என்றால் என்ன? இதில் யார் யார் முதலீடு செய்யலாம்? எதற்காக இவ்வாறு முதலீடு திரட்டப்படுகிறது வாருங்கள் பார்க்கலாம்.
உரிமை பங்கு வெளியீடு என்றால் என்ன?
பொது பங்கு வெளியிட்ட நிறுவனங்கள் தங்களது மூலதனங்களை அதிகரிப்பதற்காக மேலும் பங்குகளை வெளியிட விரும்பினால், அந்த நிறுவனம் தற்போதைய பங்குதாரர்களுக்கு அவரவர்கள் பங்கு வைத்திருக்கும் விகிதாரசப்படி, அவர்களுக்கு மட்டுமே பங்குகளை வெயீடு செய்வதே உரிமை பங்குகள் என்பர். இதில் தற்போது பங்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே பங்குகளை பெற உரிமை உள்ளது. இதற்காக நிறுவனம் அறிவிப்பு கொடுத்த 15 நாட்களுக்கு பங்குதாரர்கள் தங்களது விருப்பத்தினை தெரிவிக்க வேண்டும்.
இந்த உரிமை பங்கினை பொதுமக்கள் வாங்கலாமா?
ஒரு வேளை பங்குதாரர்களுக்கு இந்த பங்குகளை வாங்க விருப்பம் இல்லை எனும் பட்சத்தில், பொது மக்களுக்கு வெளியிடலாம். இந்த உரிமை பங்கு வெளியீடு ஒவ்வொன்றுக்கும் குறைந்தது ஒரு வருடம் இடைவெளி இருக்க வேண்டும். அல்லது நிறுவனம் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியிருக்க வேண்டும். அந்த வகையில் தற்போது எல் & டி பைனான்ஸ் நிறுவனம் தனது பங்கினை வெளியிட திட்டமிட்டுள்ளது.
நாளை முதல் தொடக்கம்
நாளை முதல் ( பிப்ரவரி 1, 2021) தொடங்கவிருக்கும் இந்த உரிமை பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் 2,998.61 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் இதற்காக 461.33 மில்லியன் ஈக்விட்டி பங்குகளை வெளியிட உள்ளது. ஒரு ஈக்விட்டி பங்கின் விலையானது 65 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பங்கு தாரர்களுக்கு ப்ரீமியம் விலை 55 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பங்குதாரர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.
பங்கு விகிதாச்சாரம்
அதோடு எல்&டி பைனான்ஸில் ஈக்விட்டி பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 74 பங்குகளுக்கும், 17 பங்குகள் என்ற விகிதாரச்சத்தில் இந்த பங்குகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீடு பிப்ரவரி 15ம் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யார யார் நிதி மேலாளர்கள்
ஆக்ஸிஸ் கேப்பிட்டல், பிஓபி கேப்பிட்டல் மார்கெட்ஸ், சிட்டி குழும குளோபல் மார்கெட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், கிரெடிட் சூசி செக்யூரிட்டிஸ், ஹெச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ் அண்ட் கேப்பிட்டல் மார்கெட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் லிமிடெட், மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் லிமிடெட், எஸ்பிஐ கேப்பிட்டல் மார்கெட்ஸ் லிமிடெட், யுபிஎஸ் செக்யூரிட்டீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் நிதி மேலாளர்களாக செயல்படுகின்றன.