நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கும் மத்தியில் பல நிறுவனங்கள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. சொல்லப்போனால் பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தினை கண்டுள்ளன. ஆனால் மறுபுறம் இதே காலகட்டத்தில் சில நிறுவனங்கள் சாதனையும் படைத்துள்ளன.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது லார்சன் & டூப்ரோ நிறுவனத்தை தான். கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் அதன் நிகரலாபம் 5 சதவீதம் அதிகரித்து, 2,466.71 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் லாபம் சற்று அதிகரித்துள்ளது. எனினும் அதன் ஆர்டர் புத்தகம் வரலாறு காணாத உச்சத்தினை தொட்டுள்ளதாககவும் இந்த நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் மதிப்பு 3.31 லட்சம் கோடி ரூபாயாகும். ஒரு காலாண்டில் இவ்வளவு ஆர்டர்களை பெற்றது, கடந்த டிசம்பர் காலாண்டில் தான் எனவும் எல்&டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதோடு இந்த காலாண்டில் தான் மிகப்பெரிய EPC ஆர்டர்களை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதோடு சர்வதேச அளவிலான ஆர்டர்கள் மொத்த ஆர்டர் புத்தகத்தில் 20 சதவீதம் பங்கு வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதே ஒட்டுமொத்த அளவில் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் ஆர்டர்களின் மதிப்பு 1,24,846 கோடி ரூபாய் என்றும் இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் செயல்பாட்டின் மூலம் வருவாய் 1.78 சதவீதம் குறைந்து, கடந்த ஆண்டினை காட்டிலும் 35,596.42 கோடி ரூபாயாகவும், இதே கடந்த ஆண்டில் 36,242.68 கோடி ரூபாயாகவும் இருந்தது.
கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால், ஹைதராபாத் மெட்ரோ நடவடிக்கைகளில் தொடர்ந்து தாக்கத்தினை ஏற்படுத்தியதாகவும், இதுவே வருவாய் சரிவுக்கு காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இந்த காலாண்டில் சர்வதேச வருவாய் 12,967 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது மொத்த வருவாயில் 36 சதவீதமாகும்.
இதே ஹெவி இன்ஜினியரிங் பிரிவில் இந்த காலாண்டில் 998 கோடி ரூபாய்க்கு ஆர்டர்களை பெற்றதாகவும் தெரிவித்துள்ளது. இதுவே இந்த நிறுவனத்தின் நியூக்கிளியர் வர்த்தகத்தில் 100% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதே ஐடி துறையில் வருவாய் 6,505 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இதுவே நிதித்துறையில் 3,401 கோடி ரூபாய் வருவாயினை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.