மத்திய அரசு நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்கள் புதிய தொழிலாளர் சட்டங்கள் மூலம் நடைமுறைக்கு வந்திருக்கின்றன.
அமைப்புசாரா துறைகளில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கும் டெலிவரி போன்ற வேலைகளில் ஈடுபடக்கூடிய கிக் பணியாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் கிடைப்பது புதிய தொழிலாளர் சட்டம் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய தொழிலாளர் சட்டத்தில் ஐடி ஊழியர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான சில அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

அண்மைக்காலமாக டிசிஎஸ் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்களே ஊழியர்கள் பணி நீக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்த வண்ணம் இருக்கின்றன. இதனால் ஐடி வேலையில் இருக்கும் ஊழியர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்த சூழலில் புதிய தொழிலாளர் சட்டம் சில குறிப்பிட்ட பாதுகாப்புகளை வழங்கி இருக்கிறது.
இதன்படி ஐடி மற்றும் ஐடி சேவை சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு மாதம் தோறும் 7ஆம் தேதியில் சம்பளம் வந்தாக வேண்டும். எனவே ஐடி ஊழியர்களுக்கு இனி மாதம் 7ஆம் தேதி ஆகும் போது சம்பளம் வந்துவிடும் . இது நிறுவனங்களில் வெளிப்படை தன்மை பின்பற்றப்படுவதும் முறையாக ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பதையும் உறுதி செய்கிறது.
இது தவிர ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் போது மற்றும் சம்பளம் வழங்கும்போதும் பதவி உயர்வு வழங்கும்போதும் ஆண் பெண் பாலின சமத்துவத்தை பேண வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. ஆணுக்கு அதிக சம்பளம் பெண் என்பதற்காகவே குறைந்த சம்பளம் , பதவி உயர்வு வழங்கும்போது ஆண்களுக்கு முக்கியத்துவம் தருவது என்பன உள்ளிட்ட நடைமுறைகள் இனி இருக்கக் கூடாது. ஆண், பெண் ஊழியர்கள் இருவரையுமே சமமான முறையில் நடத்த வேண்டும் என இந்த புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒருவேளை நீங்கள் வேலை செய்யக்கூடிய நிறுவனங்கள் இதை மீறுவதாக உங்களுக்கு தோன்றினால் இந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் முறையிடலாம். மேலும் நிறுவனங்களில் , பணி இடங்களில் நடைபெறக்கூடிய துன்புறுத்தல்கள், பாகுபாடுகள் மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உரிய நேரத்தில் தீர்வு காண்பதை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய தொழிலாளர் சட்டத்தில் நவீன அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
நிரந்தர பணியாளர்களுக்கு கிடைக்க கூடிய அனைத்து சமூகபாதுகாப்பு மற்றும் கிராஜுவிட்டி போன்ற பலன்கள் இனி ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கும் கிடைக்கும். ஐடி ஊழியர்களுக்கு பணிநீக்கம் தான் பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் எந்த ஒரு பிரிவில் தொழிலாளர் சட்டத்தில் சேர்க்கபடவில்லை என்பது ஐடி ஊழியர்களுக்கு கவலை தருகிறது.


Click it and Unblock the Notifications