கொரோனா வந்ததில் இருந்து தொடர்ந்து லே ஆஃப், சம்பளம் கட் போன்ற வார்த்தைகள் எல்லாம் பழகிவிட்டது.
இந்த பயத்துடனேயே நாமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் ஒரு சிலர் கொடுக்கும் புகாரின் பேரில், பெரிய பெரிய ஐடி கம்பெனிகளுக்கே அரசின் தொழிலாலர் துறை நோட்டிஸ் அனுப்பி இருக்கிறதாம்.
அப்படி என்ன நோட்டிஸ் அனுப்பினார்கள்? யார் புகார் கொடுத்தார்கள்? அரசு தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
விப்ரோ
புனேவில் இருக்கும் தொழிலாளர் ஆணையகத்தில் இருந்து, விப்ரோ கம்பெனிக்கு ஒரு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்கள். சுமார் 300 பேரை விப்ரோ கம்பெனி பெஞ்சிங் செய்கிறது என்றும், பல எண்ட்ரி லெவல் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து இருப்பதாகவும் புகார் வந்ததன் அடிப்படையில் அரசு தரப்பு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்கள்.
அரசு தரப்பு
விப்ரோ நிறுவனம், மகாராஷ்டிரா மாநில அரசின் மார்ச் 31, 2020 வழிகாட்டுதலில் சொல்லி இருப்பது போல "லே ஆஃப் செய்யக் கூடாது அல்லது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும்" என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது. அதோடு இந்த வழிகாட்டுதலை பின்பற்றும் படியும், பின்பற்றியதை தொழிலாளர் அலுவலகங்களுக்கு தெரியப்படுத்தும் படியும் சொல்லி இருக்கிறார்கள்.
விப்ரோ தரப்பு
விப்ரோ தரப்போ, இதுவரை அரசின் தொழிலாளர் துறையில் இருந்து தங்களுக்கு எந்த ஒரு கடிதமும் வரவில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு, விப்ரோ அரசுக்குத் தேவையான தகவல்களை, தேவையான போது கொடுக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்கள் விப்ரோ தரப்பினர்கள்.
மறுப்பு
அதோடு இந்த வதந்தியை விப்ரோ தரப்பு மறுப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். விப்ரோவில் யாருக்கும் சம்பளத்தை குறைகக்வில்லை. லே ஆஃப் செய்யவும் திட்டங்கள் இல்லை எனவும் தெளிவாகச் சொல்லி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஊழியர்களைப் பார்த்துக் கொள்ள, விப்ரோவில் நல்ல கொள்கைகள் இருக்கின்றன எனச் சொல்லி இருக்கிறார்கள்.
புகார் கொடுத்தவர்
தேசிய ஐடி ஊழியர்கள் செனட் (National Information Technology Employees Senate - NITES) என்கிற அமைப்பு தான், விப்ரோ ஊழியர்கள் சார்பாக புகார் கொடுத்து இருக்கிறது. இப்படித் தான் ஐடி கம்பெனிகள் முதலில் ஊழியர்களை பெஞ்சிங் செய்வார்கள். 2 - 3 மாதங்கள் கழித்து, அவர்களை ராஜினாமா செய்யச் சொல்வார்கள் அல்லது சட்ட விரோதமாக டெர்மினேட் செய்வார்கள் என்கிறார் இந்த அமைப்பின் பொதுச் செயலாலர் ஹர்ப்ரீத் சலூஜா.
மற்ற கம்பெனிகள்
இதே போல, கடந்த ஏப்ரல் மாதத்தில், கேப் ஜெமினி ஐடி கம்பெனியில், ஊழியர்களை கட்டாயப்படுத்தி, சம்பளம் இல்லா விடுப்பில் பெஞ்சிங் செய்யும் முடிவுக்கு எதிராக அரசின் லேபர் துறை கடிதம் எழுதியது. RNS Worldwide MSSP Pvt Ltd மற்றும் டெக் மஹிந்திராவுக்கு சப் கண்டிராக்டராக இருக்கும் Autoone Engineering Services போன்ற கம்பெனிகள் மீது லேபர் துறைக்கு புகார் வந்திருக்கிறதாம்.
சரியா தவறா
இந்த இக்கட்டான சூழலில், கம்பெனியில் இருந்து ஊழியர்களை திடீரென வேலையில் இருந்து நீக்குவது தவறு, என ஒரு தொழிலாளராக நமக்குப் படுகிறது. ஆனால் ஒரு கம்பெனியை நடத்துபவராக இருந்து பார்த்தால், வருமானமே இல்லாமல், வேலையே இல்லாமல், ஒரு சில மாதங்களுக்கு சம்பளத்தைக் கொடுக்க வேண்டும் என்றால், அது எவ்வளவு பெரிய சுமை. எப்படியாவது கொரோனா ஒழிந்தால் போதும் என்று தான் தோன்றுகிறது.