ஐடி வேலைகள் பணி பாதுகாப்பு தருவதில்லை. அதுவும் ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் ஐடி ஊழியர்களுக்கு பணிநீக்கம் என்ற கத்தி தொங்கி கொண்டே இருக்கிறது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் சென்று ஐடி வேலை பார்க்கக்கூடிய இந்தியர்களின் நிலைமை இன்னமும் மோசம்.
ஒருபுறம் விசா கட்டுப்பாடுகள் என்றால் மறுபுறம் நிறுவனங்கள் திடீரென வேலைகளில் இருந்து நீக்கிவிடுகின்றன. அப்படி அமெரிக்காவில் வேலை செய்து வந்த ஒரு இளைஞர் திடீரென தன்னுடைய வேலை பறிபோனதை அடுத்து டீக்கடை போட்டு அதில் வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய வீடியோக்கள் தான் சமூக வலைத்தளங்கள் எங்கும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Bihar Chaiwala, the chaiguy என பரவலாக அறியப்படுகிறார் பிரபாகர் பிரசாத். பீகார் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த இவர், தன்னுடைய பள்ளி படிப்பை முடித்து ஐஐடியில் கல்வி பயின்று பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று அங்கேயே வேலையும் கிடைத்து செட்டிலாகிவிட்டார். ஆனால் 2025ஆம் ஆண்டு அவருடைய வேலைக்கு வேட்டு வைத்தது ஏஐ.

தன்னுடைய நிறுவனம் திடீரென தன்னை வேலையை விட்டு நீக்கியதால் என்ன செய்வதென்று தெரியாமல் பல இடங்களில் வேலை தேடினாராம். அப்போது தான் அவருக்கு டீக்கடை போடும் ஐடியா வந்ததாம். இதனை அடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டீக்கடை போட்டார். அவர் நினைத்ததை விட அது அவருக்கு பெரிய வெற்றியை தந்துள்ளது.
சமூக வலைதளங்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர தெருக்களிலும் chaiguy என அன்போடு அழைக்கப்படுகிறார். ஒரு டீ 8 டாலர்கள் அதாவது 780 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். இது அவருக்கு சிறந்த லாபம் தரக்கூடிய தொழிலாக மாறி இருக்கிறது. அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தான் பல கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்து பணி அனுபவம் பெற்றவன் என தெரிவிக்கிறார்.
என்னதான் ஐடி வேலை செய்தாலும் தனக்கு இந்த டீக்கடை தொழிலில் பெரிய மனநிறைவு கிடைத்திருப்பதாக கூறுகிறார். வேலைக்கு சென்ற போது நிறைய பணம் ஆனால் குறைந்த சுதந்திரம் தான் இருந்தது, ஆனால் இப்போது நிறைய சுதந்திரம் இருக்கிறது மனநிம்மதியும் இருகிறது என்கிறார். 10ஆண்டுகால அமெரிக்கா ஐடி வேலை தராத மன நிறைவு இந்த சுயதொழிலில் கிடைப்பதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications