கடந்த வாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று லட்சுமி விலாஸ் வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி விதித்த கடுமையான கட்டுப்பாடுகள்.
சொல்லப்போனால் இது இந்திய வங்கிகளின் மீதான நம்பிக்கையை குறைக்கின்றது என்ற அளவு பேசப்பட்டது. ஆனால் மறுபுறமோ ரிசர்வ் வங்கியோ இவ்வங்கியை சீரமைக்கும் பொருட்டு இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்ததாக கூறியது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் லட்சுமி விலாஸ் வங்கியின் செயல்பாடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததோடு, அவ்வங்கியில் இருந்து அவசர தேவை தவிர, அதிகபட்சம் 25,000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என்றும் கட்டுப்பாடுகள் விதிகப்பட்டது.
கடுமையான கட்டுப்பாடுகள்
எனினும் வாடிக்கையாளர்கள் யாரும் பயப்பட வேண்டாம். உங்களது பணம் பாதுகாப்பாக உள்ளது. இந்த தடைகாலமானது நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை தொடரும் என்றும் கூறப்பட்டது. கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 30 நாட்களில் நிதி நிலைமை விவகாரங்களை கவனிக்க, கனரா வங்கியின் முன்னாள் தலைவர் டி என் மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கடுமையான கட்டுப்பாடுகளால், கடந்த நவம்பர் 17லிருந்து, லட்சுமி விலாஸ் வங்கி பெயரிலான பெயரிலான டிராஃப்டுகள் உள்ளிட்டவைக்கும் இனி பணம் கொடுக்கப்படாது என்றும் கூறப்பட்டது.
எதற்காக இந்த நடவடிக்கை?
அது மட்டும் அல்ல, வங்கியின் கடன் உறுதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என பல கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே கடும் நிதித் சுமையிலும், வாரக்கடன் பிரச்சனையிலும் சிக்கித் தவித்து வரும் நிலையில், இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்ததாக ரிசர்வ் வங்கி கூறியது. அதே நேரம் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து நஷ்டத்தினை மட்டுமே கண்டு வரும் இவ்வங்கி, இந்த நிதி பிரச்சனையில் இருந்து விடுபட, சரியானதொரு முதலீட்டாளரை தேடி வந்தது.
கூட்டணி சேர முயற்சி?
கடந்த ஆண்டில் ஹவுஸிங் நிதி நிறுவனமான இந்தியா புல்ஸ் நிறுவனத்துடன், கூட்டணி சேருவதற்காக முயற்சி எடுத்து வந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதனை தடை செய்தது. அதன் பிறகு கிளிக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் அதுவும் தாமதமாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த பிரச்சனைகளுக்கெல்லாம், முடிவு வேண்டுமானால் லட்சுமி விலாஸ் வங்கிக்கு முதலீடு தேவை.
டிபிஎஸ்-வுடன் இணைக்கப்படுமா?
அந்த முதலீட்டினை சிங்கப்பூரை சேர்ந்த டிபிஎஸ் வங்கி செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியது. ஆக விரைவில் லட்சுமி விலாஸ் வங்கி, ரிசர்வ் வங்கியுடன் இணைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் லட்சுமி விலாஸ் பங்குதாரர்களோ, அது வேண்டாம் என ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. ஆக இதற்கிடையில் 94 வருட பழமையான ஒரு வங்கி, சிங்கப்பூர் வங்கியுடன் இணைக்கப்படுமா? அல்லது என்ன நடக்கும்? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
கேர் ரேட்டிங்ஸ் மதிப்பீடு
இதற்கிடையில் தான் தற்போது கேர் ரேட்டிங்ஸ் மதிப்பீட்டு நிறுவனம், லட்சுமி விலாஸ் வங்கியின் பத்திரங்களாக மற்ற முடியா கடனீடுகளின் மதிப்பீட்டை, BB என்ற நிலையில் இருந்து BB Negative என்று மாற்றியுள்ளது. இதனால் இந்த வங்கியின் பங்கு விலையானது இன்றும் 10 சதவீதத்திற்கு மேலாக குறைந்து, அதன் முகமதிப்புக்கு கீழாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த சில வர்த்தக தினங்களில் மட்டும் 60 சதவீதத்தினை இழந்துள்ளது.
நம்பிக்கையின்மை
மேற்கண்ட பலவேறு குழப்பங்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள், இந்த பங்கின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். இதன் காரணமாக கையிலிருக்கும் பங்குகளை விற்று வருகின்றனர். இதன் காரணமாக இதன் பங்கு விலையானது கடுமையான வீழ்ச்சியினை சந்தித்து கொண்டுள்ளது. இது முதலீட்டாளர்களிடம் உள்ள பங்குகளை விற்க தூண்டியதுடன், புதிய முதலீடுகளையும் தள்ளி வைக்கிறது.