இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் மற்றும் கட்டுமான துறையில் தனக்கென தனி இடம் பதித்துள்ள எல்& டி நிறுவனம், குஜராத் புல்லட் ரயில்வே திட்டத்திற்கான மற்றொரு ஏலத்தில் வென்றுள்ளது.
மும்பை - அகமதாபாத் திட்டத்தின் சி6 தொகுப்பிற்கு பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான எல்&டி நிறுவனம், 7,289 கோடி ரூபாய்க்கு, மிகக் குறைந்த ஏலதாரராக உருவெடுத்துள்ளது.
இதன் மூலம் அகமதாபாத் மற்றும் வதோதரா இடையேயான 88 கிலோமீட்டர் பாதையை அமைக்கவும், இதே குஜராத்தில் ஆனந்த் / நாடியாட் ஸ்டேஷனை கட்டவும் உள்ளது.
சி4 திட்டமும் எல்& டி தான் வென்றது
இந்த உத்தரவு தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து லார்சன் & டூப்ரோ வென்றுள்ளது. இந்த திட்டமானது ஏற்கனவே இந்த நிறுவனம் 24,985 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா திட்டமான சி4 திட்டத்தினை வென்ற பிறகு வந்துள்ளது. இது வாபி மற்றும் வதோதராவிற்கு இடையிலான 237 கிலோமீட்டர் இடையிலான பாதை மற்றும் இடையில் நான்கு ஸ்டேஷங்களை அமைக்கவும் வழங்கப்பட்டது கவனிக்கதக்கது.
யார் யார் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர்?
இந்த ஏலத்தில் டாடா புராஜக்ட்ஸ், ஜே குமார் இன்ப்ராஸ்டிரக்சர் புராஜக்ட்ஸ், என்சிசி, AFCONS Infrastructure, Ircon International-JMC projects consortiums உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னென்ன அம்சங்கள்?
மேலும் இந்த சி6 திட்டத்தில் 87.5 கிலோமீட்டர் வையாடக்ட்ஸ் மற்றும் பாலங்கள், 25 பாலங்கள், ஒரு சுரங்கப்பாதை, 97.50 கிலோமீட்டர் சாலைகள், ஒரு ஸ்டேஷன், பராமரிப்பு டிப்போ நான்கு துணை பராமரிப்பு டிப்போஸ், மற்றும் இன்னும் பிற தொடர்புடைய கட்டமைப்புகள் என பலவற்றையும் இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது.
நிதியுதவி
ஜப்பான் நிறுவனம் நிதியுதவி
ஒரு லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள இந்த திட்டத்தில் ஜெய்கா (Japan International Cooperation Agency) நிறுவனம் நிதியுதவி செய்து வருகின்றது. இதற்கு முன்பு எல் & டி நிறுவனம் மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் பிற பகுதிகலை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
முதல் புல்லட் ரயில்
நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமான இதற்கு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனை வரும் டிசம்பர் 2023ஆம் ஆண்டுக்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. எப்படியும் 2024ஆம் ஆண்டிற்குள் புல்லட் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கொரோனாவின் காரணமாக இந்த பணிகள் தாமதமடைந்துள்ள நிலையில், எப்போது இந்த பணி முடியும் என்ற அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.