டெல்லி: கடந்த ஒரு ஆண்டு காலமாகவே இந்தியாவை ஆட்டிப்படைத்து வரும் மந்த நிலைக்கு மத்தியிலும், இந்தியாவிலுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் சாதனை புரிந்து வருகின்றன.
இதற்கு சிறந்த உதாரணம் தான். மும்பையை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லார்சன் & டூப்ரோ நிறுவனம்.
கடந்த ஆண்டு முழுவதுமே இந்தியாவை மந்தநிலை ஆட்டிப்படைத்து வந்த நிலையிலும் கூட, லார்சன் & டூப்ரோ நிறுவனம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நல்ல லாபம் கண்டுள்ளது.
சோதனையிலும் எழுச்சி
பொறியியல் மற்றும் கட்டுமான துறையில் தனக்கென தனி இடம் பதித்துள்ள எல்& டி நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகரலாபம் 15.2% அதிகரித்து, 2,352 கோடி ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது. அதுவும் நாட்டில் நிலவி வரும் மோசமான பொருளாதார வளர்ச்சி என பற்பல தலைவலிகள் இருந்த போதிலும் இப்படி ஒரு ஏற்றம் கண்டுள்ளது.
பற்பல இடர்பாடுகள்
நாட்டில் கடந்த ஒர் ஆண்டு காலமாகவே இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், பல துறைகளும் வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த 2018ம் ஆண்டில் டிசம்பர் காலாண்டில் கூட இந்த நிறுவனம் 2041.62 கோடி ரூபாய் மட்டுமே லாபம் கண்டிருந்தது. இதே 2019ல் செப்டம்பர் காலாண்டில் 2,527.26 கோடி ரூபாய் லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய் எவ்வளவு?
ஒருங்கிணைந்த மொத்த வருவாயானது டிசம்பர் 31வுடன் முடிவடைந்த காலாண்டில் 6% அதிகரித்து 36,243 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 34,234 கோடி ரூபாயாக வருவாய் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மொத்த வருவாயில் 36% இருந்த சர்வதேச அளவில் செய்யப்பட்ட திட்டங்கள் மூலம் கிடைத்த வருவாய் என்றும், இதன் மதிப்பு 12,871 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
9 மாதங்களில் லாபம்
டிசம்பர் 31வுடன் முடிவடைந்த கடந்த ஒன்பது மாதங்களில் இந்த நிறுவனத்தின் லாபம் (profit after tax) 6,352 கோடி ரூபாய் எனவும், இதே வருவாய் 1,01,207 கோடி ரூபாயாகவும் இருந்ததாக எல் & டி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் புதிய ஆர்டர்கள் தான் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாபத்திற்கு முக்கிய காரணம்
கடந்த டிசம்பர் காலாண்டில் இந்த குழுமம் பெற்ற புதிய ஆர்டர்களே, இந்த குழுமத்தின் லாபத்திற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் டிசம்பர் காலாண்டில் இந்த குழுமம் 41,579 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஆர்டர்களை வென்றுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச ஆர்டர் அதிகரிப்பு
இதே கடந்த டிசம்பர் காலாண்டில் சர்வதேச ஆர்டர்கள் மட்டும் 17,901 கோடி ரூபாய்க்கு பெறப்பட்டுள்ளதாக எல்&டி தெரிவித்துள்ளது. இது இந்த நிறுவனத்திற்கு கிடைத்த மொத்த வருவாய் ஆர்டர்களில் 43% என்றும் கூறியுள்ளது. இதே டிசம்பர் 31, நிலவரப்படி, எல்& டி குழுமத்தின் ஒருங்கிணைந்த ஆர்டர் மதிப்பு 3,06,280 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது கடந்த மார்ச் 2019ஐ விட 5% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
பிரிவு வாரியாக லாபம்
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப சேவை பிரிவு வருவாய் 6,090 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் மைண்ட் ட்ரீ கையகப்படுத்தல் கணக்கில் 1,965 கோடி ரூபாயும் அடங்கும். உள்கட்டமைப்பு பிரிவில் கிடைத்த புதிய ஆர்டர்களின் மதிப்பு 28,115 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 28% அதிகமாகும். இதே மின் பிரிவில் 816 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எல்&டி பங்கு விலை
இப்படியாக ஒவ்வொரு துறையிலும் எழுச்சி கண்டு வரும் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது, தாறுமாறாக ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது (1.13 மணியளவில்) 2.57% ஏற்றம் கண்டு 1327.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இன்று அதிகபட்சமாக 1339.50 ரூபாய் வரையிலும், இதே குறைந்தபட்சம் 1,302 ரூபாயாகவும் வர்த்தகமாகியுள்ளது.