இந்தியாவில் பெரு நகரங்களில் இருக்கும் மக்கள் எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொதுவான ஏக்கம் சுத்தமான குடிநீர், பூச்சி மருத்து இல்லாத காய்கறி-பழங்கள், தரமான பால் நம் குடும்பத்திற்கு அளிக்க முடியுமா என்பது தான். அப்படிக் கிடைத்தாலும் பணத்தைக் கொட்டிக் கொடுக்க வேண்டியிருக்கிறது.
மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்தியிலான இடைவெளி மிகவும் அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த இடைவெளியைக் குறைத்தால் மக்களுக்கும் நல்ல பொருட்கள் கிடைக்கும், விவசாயிகளுக்கும் கூடுதலான வருமானம் கிடைக்கும்.
இதைத் தான் சேலம் மாவட்டத்தின் ராசிபுரத்தை சேர்ந்த செல்வகுமார் செய்கிறார்.
தம்மம்பட்டி கிராமம்
சேலம் மாவட்டத்தின் ராசிபுரம் அருகே இருக்கும் தம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியை மகனான செல்வகுமார் ஐடி வேலையை விட்டுவிட்டு விவசாயத் துறையில் தற்போது புதிய வர்த்தகத்தைத் துவங்கி மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார்.
விவசாயக் குடும்பம்
விவசாயக் குடும்பத்தில் பிறந்த செல்வகுமார் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்து, கோவையில் கார்பரேட் செக்ரட்டரிஷிப் பிரிவில் இளங்கலை பட்டம், அதன் பின்பு பாரதியார் பல்கலைக்கழகத்தில் பைனான்ஸ் அண்ட் கன்ட்ரோல் பிரிவில் முதுகலைப் பட்டம், அதன் பின்பு பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில் மேனேஜ்மென்ட் முடித்தார்.
பெங்களூர் பயணம்
2013ஆம் ஆண்டுப் படிப்பை முடித்த செல்வகுமார் வேலைவாய்ப்புகளைத் தேடி பெங்களூருக்கு சென்றார், பல மாத தேடலுக்குப் பின்பு அக்சென்சர் பிபிஓ நிறுவனத்தின் டேட்டா வேலிடேஷன் அசோசியேட் பணியில் சேர்ந்தார். அக்சென்சர் நிறுவனத்தில் சேர்ந்த 4 மாதத்தில் வேலை பிடிக்காத காரணத்தால் ராஜினாமா செய்தார்.
ஆசிரியர்
இதன் பின்பு ஒரு வருடம் வீட்டிலேயே டியூசன் மற்றும் கோச்சிங் சென்டரில் பாடம் நடத்தினார், இதன் பின்பு 5 வருடம் ICFAI நேஷனல் கல்லூரியில் நிதியியல் பிரிவில் ஆசிரியர் ஆகவும், பிளேஸ்மென்ட் கோஆர்டினேட்டர் ஆகவும் பணியில் சேர்ந்தார்.
திருமணம்
2013ல் செல்வகுமாருக்கு ஷர்மிளா உடன் திருமணம் ஆனது, ஷர்மிளா ஜென்பேக்ட் மற்றும் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இருவரும் பெங்களூரில் வசித்து வந்த போது காய்கறிகள் மற்றும் டைய்ரி பொருட்களின் தரம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இவர்களின் பெற்றோர் பெங்களூர் வரும் போதும் இதே கருத்தைத் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சனை தான் Laymen Agro Ventures நிறுவனமாக உருவாக முக்கியக் காரணமாக அமைந்தது.
2016ல் லேமென் அக்ரோ வென்சர்ஸ்
பல வேலைகளில் இருந்த செல்வகுமார் 2016ல் மனைவி ஷர்மிளாவின் உதவி மற்றும் துணையோடு 2016ல் லேமென் அக்ரோ வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Laymen Agro Ventures) நிறுவனத்தை 30 லட்சம் ரூபாய் முதலீட்டில் உருவாக்கினார். இந்த முதலீட்டுக்குத் தனது சேமிப்பு மட்டும் அல்லாமல் குடும்பம் மற்றும் நண்பர்கள் கடன் உதவி செய்துள்ளனர்.
விவசாயி டூ மக்கள்
லேமென் அக்ரோ வென்சர்ஸ் நிறுவனத்தின் அடிப்படை என்னவென்றால் Farm to Kitchen Table கான்செப்ட் தான். நேரடியாக விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்களை வாங்கி எவ்விதமான கலப்படம் இல்லாமல் நகரங்களில் வாழும் மக்களுக்கு அளிப்பது தான் பிஸ்னஸ் ஐடியா.
4.3 கோடி ரூபாய் வருமானம்
இந்த நிறுவனத்தின் முதல் வருடம் வெறும் 8 லட்சம் ரூபாய் மட்டுமே வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு வருடமும் 45 முதல் 50 சதவீத வளர்ச்சியில் 2020-21 நிதியாண்டில் 4.3 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது லேமென் அக்ரோ வென்சர்ஸ்.
மனைவி-யின் ஐடியா
பெங்களூரில் எங்களது 2 வயது குழந்தைக்குத் தரமான பால் கொடுக்க நினைக்கும் போது கிடைக்காமல் தவித்த போது, என் மனைவி கொடுத்த ஐடியாவின் பெயரில் வர்த்தகத்தைத் துவங்கினோம், நான் நிர்வாகம் மட்டுமே செய்து வருகிறேன் எனப் பெருமையாகக் கூறுகிறார் செல்வகுமார்.
கோயம்புத்தூர் தான் சரி
செல்வகுமார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தனது வர்த்தகத்திற்குச் சரியான இடம் கோயம்புத்தூர்-ஐ தான் தேர்வு செய்தார். சென்னைக்கு அடுத்த பெரிய நகரம் அதேபோல் கோயம்புத்தூர்-ஐ சுற்றி அதிகளவிலான விவசாயக் கிராமங்கள் இருக்கும் காரணத்தால் வர்த்தகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும் என நம்பினார்.
விவசாயிகளிடம் ஒப்பந்தம்
2016ல் லேமென் அக்ரோ வென்சர்ஸ் நிறுவனத்தைத் துவங்கிய பின்பு கோயம்புத்தூர் அருகில் இருக்கும் விவசாயிகளிடம் ஒப்பந்தம் முறையில் கூட்டணி வைத்து வர்த்தகத்தைத் துவங்கியுள்ளார். இது aggregator model முறையில் வர்த்தகம் செய்யப்படும் காரணத்தால் உற்பத்தியாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மத்தியில் ஒருவர் மட்டுமே இருப்பார்.
VilFresh பிராண்ட்
இந்தத் திட்ட வடிவத்தில் தற்போது தினமும் 100 விவசாயிகளிடம் இருந்து 1800 லிட்டர் பால் VilFresh (Village Fresh) பிராண்டின் கீழ் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த வர்த்தகம் தற்போது கோயம்புத்தூர் பகுதியில் மட்டுமே செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு நல்ல வருமானம்
செல்வகுமாரின் லேமென் அக்ரோ வென்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் இடைத்தரகர்கள் நீக்கப்பட்டு விவசாயிகள் சிறப்பான வருமானத்தைப் பெறுவது மட்டும் அல்லாமல் கிராமப் பகுதிகளில் வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளது.
மக்கள் டூ 5 ஸ்டார் ஹோட்டல்
VilFresh பிராண்டுக்கு தற்போது 2000 வாடிக்கையாளர்கள் நேரடி பால் வாங்கி வருகின்றனர். VilFresh தற்போது கோயம்புத்தூர் பகுதியில் 100க்கும் அதிகமான அப்பார்ட்மென்ட் மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களான Marriott, ITC Welcome ஆகியவற்றுக்கும் பால் சப்ளை செய்து வருகிறது.
கிராமங்கள்
கோயம்புத்தூர்-ஐ சுற்றி 15 கிலோமீட்டர் அருகில் இருக்கும் கோவில்பாளையம், குரும்பபாளையம், பச்சப்பாளையம், தேவாம்பாளையம் மற்றும் பொன்னைங்கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் 100 விவசாயிகளிடம் கூட்டணி வைத்துள்ளார் செல்வகுமார்.
50 ரூபாய் மட்டுமே
VilFresh பிராண்ட் ஒரு லிட்டர் பால் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4 மணிக்குப் பால் கரக்கப்பட்டு 7 மணிக்கு முன் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருக்கும் வகையில் சப்ளை செயினை உருவாக்கியுள்ளார். இதேபோல் பாலின் தரம் சந்தையில் கிடைக்கும் பிராண்ட்-ஐ விடவும் சிறப்பாக இருப்பதாகவும் இந்தப் பிராண்டு கூறுகிறது.
கோவை கிடங்கு
இந்தக் கிராமங்களில் வரும் பாலை கோவையில் இருக்கும் 2000 சதுரடி கொண்ட தளத்தில் தர சோதனை செய்யப்பட்டுப் பேக் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்படுவதாகச் செல்வகுமார் கூறியுள்ளார்.
தோசை மாவு, பொடி
மேலும் இந்நிறுவனம் தோசை மாவு, பொடி வகைகளை 4 சிறு தொழில் நிறுவனத்திடமும், 10 வீட்டுத் தொழிலகத்தில் இருந்தும் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்து வருகிறது செல்வகுமாரின் லேமென் அக்ரோ வென்சர்ஸ் நிறுவனம்.
பிற முக்கியப் பொருட்கள்
தற்போது செல்வகுமாரின் லேமென் அக்ரோ வென்சர்ஸ் நிறுவனம் பால் மட்டும் அல்லாமல் பழம், கீரை, காய்கறி, தேன், முட்டை, சமையல் எண்ணெய், தோசை மாவு, பிரெட், பன்னீர், வெண்ணெய், நெய், ஊறுகாய், பொடி, சாக்லெட், நொறுக்குத்தீனி, கேக் வரையில் Home to table, farm to table முறையில் விற்பனை செய்து வருகிறது.
லேமென் அக்ரோ வென்சர்ஸ் பங்குகள்
செல்வகுமாரின் லேமென் அக்ரோ வென்சர்ஸ் நிறுவனம் தற்போது செல்வகுமார் மற்றும் ஷர்மிளா ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது. இந்நிறுவனத்தில் செல்வகுமார் மற்றும் ஷர்மிளா 60 சதவீத பங்குகளையும், 25 சதவீத பங்குகள் குடும்பம் மற்றும் நண்பர்கள் மற்றும் 15 சதவீத பங்குகள் நண்பர்கள் கையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.