நாட்டிலேயே எல்ஐசி ஐபிஓ தான் மிகப்பெரிய ஐபிஓ- ஆக இருக்கும். இந்திய வரலாற்றில் இப்படியொரு ஐபிஓ வந்திருக்காது என்றெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய எல்ஐசி (LIC) ஐபிஓ, முன்பு திட்டமிட்டதை விட மூன்றில் ஒரு பங்கு தான் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
கேரளாவின் முன்னாள் நிதியமைச்சரான தாமஸ் ஐசக் எல்ஐசி-யின் குறைக்கப்பட்ட சந்தை மதிப்பீடு பற்றி, ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு அதிகாரிகள் இதற்கு பல காரணங்கள் உண்டு. மதிப்பீடுகள் பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
பேடிஎம் போன்று தாக்கம் இருக்கலாம்
குறிப்பாக எதிர்கால பணப்புழக்கம் உள்பட பல சர்வதேச காரணிகள் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் அதிக மதிப்பீடுகள் பேடிஎம் போன்று சரிவினை ஏற்படுத்தலாம். ஒரு சொத்தின் உண்மையான மதிப்பீட்டினை சந்தைகள் தீர்மானிக்க வேண்டும் என்று அரசாங்கம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.
வளர்ச்சி சீராக இருக்கனும்
அதன் மதிப்பு நன்றாக வளர்ச்சியடையும் பட்சத்தில் அனைத்து பங்குதாரர்களும் பயனடைவார்கள். சந்தை ஏற்ற இறக்கத்தினை மனதில் கொண்டு பங்குதாரர்கள் ஒரு மதிப்பீட்டினை முன் வைக்கின்றனர். எங்களின் எண்ணம் பட்டியலிட்ட பின்னரும் அதிக தேவை இருக்க வேண்டும். அதற்கு வெளியீட்டு விலையும் சரியானதாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஏன் குறைப்பு?
ஆரம்பத்தில் எல்ஐசி-யின் பங்கானது 10% விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பின்னர் 5% ஆக குறைக்கப்பட்டது. ஆனால் சந்தையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் அது 3.5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. எல்ஐசி-யின் சந்தை மதிப்பும் குறைந்துள்ளது. ஆக இதன் வெளியீட்டு மதிப்பு 60,000 கோடியில் இருந்து, 22,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
யோசனை
மத்திய அரசு தற்போது வெறும் 3.5% பங்குகளை மட்டுமே விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களே காரணம். இது அன்னிய முதலீட்டாளர்களை பின்னோக்கி செல்ல வழிவகுத்துள்ளது. தற்போது அதிக மதிப்பீட்டில் பங்குகளை விற்பனை செய்து, அது பின்னர் சரிவினைக் காண்பது குறித்தும் நாங்கள் யோசிப்போம் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எப்போது?
இந்த நிலையில் மே 4 அன்று எல்ஐசி ஐபிஓ வெளியீடு தொடங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மே 9 அன்று முடிவடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசு 21000 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாகவும் தெரிகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்தால் மட்டுமே உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவரும்.