நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி (LIC), மே 10 முதல் அதன் ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற சலுகை அமல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து கடந்த மாதமே அறிவிப்பு வெளியானது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்த நிலையில், ஒவ்வொரு சனிக்கிழமையும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசியின் இந்த அறிவிப்பானது ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சூப்பர் அறிவிப்பு
எல்ஐசி-யின் இந்த அதிரடியான சலுகை குறித்து அனைத்து பாலிசிதாரர்களுக்கும் மற்றும் மற்ற பங்குதாரர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான பொது அறிவிப்பில் அனைத்து எல்ஐசி அலுவலகங்களும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அலுவலக நேரமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஆலோசனை
கடந்த மாதத்தில் எல்ஐசி ஊழியர்கள் அமைப்பு மற்றும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஊழியர்களுக்கு 15% - 16% வரை சம்பள உயர்வு மற்றும் வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் உட்பட பலவும் விவாதிக்கப்பட்டன. அந்த சமயத்தில் வங்கி ஊழியரக்ளுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் வேளையில், எல்ஐசி ஊழியர்களுக்கும் அளிப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில் தான், தற்போது வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பது நடைமுறைக்கு வந்துள்ளது.
ஊழியர்கள் பயன்
தற்போது எல்ஐசியில் உள்ள சுமார் 1.14 ஊழியர்கள், இந்த அறிவிப்பால் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஊழியர்கள் தரப்பில், எல்ஐசி டிஜிட்டல் பயன்பாடு என்பது அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் தான் ஊழியர்களுக்கு வேலை செய்யும் நேரத்தினை குறைக்கும் நடவடிக்கையாக, வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற நடைமுறையினை ஊழியர்கள் எதிர்பார்த்தனர். இப்படியொரு நிலையில் தான் எதிர்பார்ப்பினை போலவே நடைமுறைக்கும் வரவுள்ளது.
போராட்டத்தின் எதிரொலியா?
கடந்த ஏப்ரல் மாதத்தில் வங்கி ஊழியர்களை தொடர்ந்து எல்ஐசி ஊழியர்களும் போராட்ட களத்தில் இறங்கினர். இந்த போராட்டமானது மத்திய அரசு எல்ஐசி-யின் பங்கினை பொதுப்பங்கு வெளியீடு மூலமாக விற்பனை செய்ய போவதாக அறிவித்ததையடுத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் எல்ஐசி ஊழியர்களுக்கு சம்பள உயர்வும், வாரத்தில் 5 நாட்கள் வேலைக்கும் அரசு ஒப்புதல் அளித்தது நினைவு கூறத்தக்கது.