இந்தியாவின் மிகப்பெரிய லைப் இன்சூரன்ஸ் சேவை நிறுவனமான லைப் இன்சூரனஸ் கார்பரேஷன் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் கட்டாயம் ஐபிஓ மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என மத்திய நிதியமைச்சகத்தின் சில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா காலகட்டத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும், பங்குச்சந்தையையும் காப்பாற்றியது ஐபிஓ தான் என்றால் மிகையில்லை. அடுத்தடுத்து முன்னணி நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடும் காரணத்தால் முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து முதலீடு செய்ய வாய்ப்புகள் உருவாகி வருகிறது.
இந்த வேகத்தில் நாட்டின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஐபிஓ வெளியிட உள்ள நிலையில், பொதுத்துறை நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் நிறுவனம் சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ வெளியிட உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வாக இருக்கும் நிலையில், சுமார் 18 முதலீட்டு நிறுவனங்கள் ஐபிஓ வெளியீட்டுக்கான கூட்டணி விண்ணப்பம் செய்துள்ளது.
உள்நாட்டு நிறுவனங்களான கோட்டாக் மஹிந்திரா கேபிட்டல், ஆக்சிஸ் கேப்பிடல், ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ், ஜேஎம் பைனான்சியல், DAM கேப்பிடல், எடெல்விஸ், ஹெச்டிஎப்சி வங்கி, யெல் செக்யூரிட்டிஸ், எஸ்பிஐ கேப்பிடல், ஐஐஎப்எல், இதேபோல் வெளிநாட்டு நிறுவனங்கள் பட்டியலில் சிட்டி, பாங்க் ஆப் அமெரிக்கா, ஹெச்எஸ்பிசி, கோல்டுமேன் சாச்சிஸ், ஜேபி மோர்கன், பிஎன்பி பரிபாஸ், நோமுரா, CLSA ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளது.
இதே காலகட்டத்தில் கடனில் சிக்கியிருக்கும் ஏர் இந்தியா மற்றும் நாட்டின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக இருக்கும் பார்த் பெட்ரோலியம் ஆகிய நிறுவனப் பங்குகளையும் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்து தனியார்மயமாக்கல் பணிகளையும் மார்ச் 2022க்குள் முடிக்க உள்ளதாகத் துகின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.