இந்திய பங்குச்சந்தையில் பேடிஎம் தோல்விக்குப் பின்பு ஐபிஓ வெளியிட பல முன்னணி நிறுவனங்களும் பயப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு பல குழப்பங்கள் மாற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யின் மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிட்டது.
மத்திய அரசு எடுத்த ரிஸ்க்-கிற்கு 2வது நாள் முடிவிலேயே பலன் கிடைத்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
எல்ஐசி நிறுவனம்
எல்ஐசி நிறுவனத்தின் பிரம்மாண்ட ஐபிஓ மே 4ஆம் தேதி ரீடைல் முதலீட்டாளர்களுக்குத் திறக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளான வியாழக்கிழமை (மே 5) முடிவில் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) ஐபிஓ-வின் 100 சதவீத பங்குகளுக்கும் முதலீடு குவிந்துள்ளது.
ஐபிஓ சந்தை
இந்திய ஐபிஓ சந்தையில் இதுவரை இல்லாத வகையில் ரூ. 20,557 கோடி என்ற மிகப்பெரிய ஐபிஓ-வில் முதலீடு செய்ய மே 9 வரை அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2வது நாளிலேயே 100 சதவீத பங்குகளுக்கும் முதலீடு குவிந்தது மகிழ்ச்சியான செய்தியாகும்.
சில்லறை முதலீட்டாளர்கள்
இதேபோல் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்குப் போதுமான முதலீடு வராது என ஒரு கணிப்பு இருந்த வேளையில் மத்திய அரசின் கோரிக்கை அடிப்படையில் தேசிய பங்குச்சந்தை யாரும் அளிக்காத சலுகையான சனிக்கிழமை ஐபிஓ-வில் முதலீடு செய்யும் சலுகை அளிக்கப்பட்டது.
1.03 மடங்கு பங்குகள்
மும்பை பங்குச்சந்தையின் தரவுகளின்படி, எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள 16,20,78,067 பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் 16,68,60,765 ஈக்விட்டி பங்குகளுக்கு முதலீடு செய்து உள்ளனர். அதாவது மொத்த ஐபிஓ பங்குகளுக்கு 2வது நாள் முதலீட்டில் 1.03 மடங்கு பங்குகளுக்கு முதலீடு குவிந்துள்ளது.
ஐந்து பிரிவுகள்
எல்ஐசி நிறுவனம் ஐந்து பிரிவுகளில் பங்குகளை இந்த ஐபிஓ-வில் விற்பனை செய்யும் நிலையில் அனைவரின் கண்களும் எல்ஐசி பணியாளர்கள் மற்றும் எல்ஐசி பாலிசிதாரர்கள் ஒதுக்கீடுகள் மீது தான் உள்ளது. எல்ஐசி பணியாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பங்குகளுக்கு 3.11 மடங்கும் மற்றும் எல்ஐசி பாலிசிதாரர்கள் 2.22 மடங்கும் முதலீடு குவிந்துள்ளது.