எல்ஐசி ஐபிஓ இன்று (மே 9) உடன் முடிவடைகிறது. இந்நிலையில் இரண்டு பிரிவினர்கள் மட்டும் 2 அல்லது 3 முறை வரை பங்குகளை வாங்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, ஐபிஓ மூலம் 20,557 கோடி ரூபாய் நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது. அதில் 50 சதவீதத்தைத் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் வாங்கலாம். 35 சதவீதத்தைச் சில்லறை முதலீட்டாளர்கள் வாங்கலாம். 15 சதவீதத்தை நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களும் வாங்கலாம்.
பொது விதி
ஐபிஓவில் பங்குகளை வாங்கும் போது, பொதுவாக ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டும் அனுமதிக்கப்படும். அதாவது ஒரு பான் எண்ணைப் பயன்படுத்தி ஒரு முறை பங்குகளை வாங்கிவிட்டால், அதே பான் எண்ணைப் பயன்படுத்தி மற்றொரு கணக்கிலிருந்து விண்ணப்பித்தாலும் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
எல்ஐசி ஐபிஓ விதிவிலக்கு
எல்ஐசி ஐபிஓ அதிலிருந்து விதிவிலக்காகக் குறிப்பிட்ட பிரிவினர் மற்றும் 2 அல்லது மூன்று வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு?
எல்ஐசி ஐபிஓவில் அதன் ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் அல்லது இரண்டுமாக உள்ளவர்கள், இரண்டு அல்லது 3 முறை வரை பங்குகளை வாங்கலாம்.
ஊழியர்கள்
எல்ஐசி நிறுவன ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்களாக உள்ளவர்கள், ஏற்கனவே ஊழியர்கள் பிரிவில் பங்குகளை வாங்கி இருந்தால் அவர்கள் பாலிசிதாரர்கள் மற்றும் ரீடெயில் பிரிவிலும் பங்குகளை வாங்கலாம். அதுவே ஊழியர்களாக மட்டும் இருந்தால் கூடுதலாக ரீடெயில் பிரிவில் பங்குகளை வாங்க விண்ணப்பிக்கலாம்.
பாலிசிதாரர்கள்
எல்ஐசி பாலிசிதாரர்கள் அவர்களுக்கான பிரிவில் எல்ஐசி ஐபிஓவில் பங்குகள் வாங்கி இருந்தால் கூடுதலாக ரீடெயில் பிரிவில் பங்குகளை வாங்கலாம். பாலிசிதாரர்களுக்கு அவர்களது பிரிவில் ஒரு பங்குக்கு 60 ரூபாய் ஆஃபர் வழங்கப்பட்டது. அதுவே ரீடெயில் பிரிவில் 45 ரூபாய் ஒரு பங்குக்கு ஆஃபர் கிடைக்கும்.
இன்றே கடைசி
எப்போது வரை வாங்க முடியும்? மே 4-ம் தேதி தொடங்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ பங்குகளை மே 9ம் தேதி வரை வாங்கலாம். மே 12-ம் தேதி பங்குகள் அலாட் செய்யப்படும். மே 13-ம் தேதி ரீஃபண்ட் கிடைக்கும். மே 16-ம் தேதி டிமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்படும். மே 17-ம் தேதி பொது சந்தையில் வெளியிடப்படும்.
பங்கின் விலை
ரீடெயில் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கு ஒரு பங்கின் விலையான 949 ரூபாயிலிருந்து 45 ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது. எல்ஐசி பாலிசி வைத்துள்ளவர்களுக்கு 60 ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது. எனவே குறைந்தது 889 ரூபாய் முதல் 949 ரூபாய் ஒரு பங்கு என வாங்க முடியும்.
தற்போதைய நிலை
மே8-ம் தேதி மாலை 7 மணி வரையில், எல்ஐசி பாலிசிதாரர்கள் 5.04 மடங்கு பங்குகளை வாங்கியுள்ளனர். ஊழியர்கள் 3.79 மடங்கு முதலீடுகளைக் குவித்துள்ளார்கள். சில்லறை முதலீட்டாளர்கள் 1.59 மடங்கு அதிக பங்குகளை வாங்கி குவித்துள்ளார்கள். நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்கள் 1.24 மடங்கும், தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் 0.67 சதவீதமும் முதலீடு செய்துள்ளார்கள். தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் எல்.ஐ.சி ஐபிடோவில் கவனம் செலுத்தாதது ஏன் என்பது கேள்வியாக உள்ளது.