இந்தியாவின் 64 சதவீத ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தைத் தன்னிடம் வைத்துக்கொண்டு யாரும் பெற முடியாத ஆதிக்கத்தை எல்ஐசி நிறுவனம் பெற்று இருக்கும் இந்த வேளையில் மத்திய அரசு இந்த ஆதிக்கத்தைப் பணமாக்க முடிவு செய்துள்ளது.
ஆம், மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பது அனைவருக்கும் தெரியும், இந்த நெருக்கடியைச் சமாளிக்கக் கடன் பெறுவதற்குப் பதிலாகக் கேப்பிடல் சந்தையில் முதலீட்டை திரட்டுவதன் மூலம் ஈடுசெய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு எல்ஐசி பாலிசி வைத்துள்ள அனைவருக்கும் மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு சுமார் 75,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்கான DRHP அறிக்கையை அடுத்தச் சில நாட்களில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமாகச் செபியிடம் அளிக்கத் திட்டமிட்டு வருகிறது.
பாலிசிதாரர்களுக்குச் சிறப்புச் சலுகை
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ-வில் எல்ஐசி நிறுவனத்தின் இந்தப் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பாலிசிதாரர்களுக்குச் சிறப்புச் சலுகையாக ஐபிஓ முதலீட்டில் 5 சதவீத டிஸ்கவுண்ட் அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
DRHP அறிக்கை
பிப்ரவரி 10ஆம் தேதி செபியிடம் எல்ஐசி நிறுவனம் DRHP அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், பாலிசிதாரர்களுக்கு மட்டும் அல்லாமல் ரீடைல் முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குச் சில சலுகைகளை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஓ-வில் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டை ஈர்ப்பது தான் முக்கிய இலக்காக உள்ளது.
75,000 கோடி ரூபாய் ஐபிஓ
இந்த ஐபிஓ-விற்காக எல்ஐசி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலருக்குப் பணிக்காலம் நீட்டிப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. எல்ஐசி நிறுவனம் இந்த ஐபிஓ-வில் 5-7 சதவீத பங்குகளை விற்பனை செய்து 65,000 முதல் 75,000 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டை பெற திட்டமிட்டு உள்ளது.
பான் கார்டு இணைப்பு
எல்ஐசி பாலிசிதாரர்கள், எல்ஐசி நிறுவன ஐபிஓ-வில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் எல்ஐசி பாலிசி உடன் பான் எண்-ஐ இணைக்க வேண்டும். இல்லையெனில் முதலீடு செய்ய முடியாது.