இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வெளியிட்ட ஐபிஓ-வில் 3 மடங்கு முதலீட்டைப் பெற்றாலும் இன்று சுமார் 65 ரூபாய் தள்ளுபடி விலையில் சுமார் 867.20 ரூபாய்க்கு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
இதனால் எல்ஐசி முதலீட்டாளர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 42500 கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
எல்ஐசி பங்குகள்
எல்ஐசி பங்குகள் 867.20 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்டாலும் முதல் 5 நிமிடத்தில் எல்ஐசி பங்குகள் சுமார் 920 ரூபாய் வரையில் உயர்ந்தது. ஆனாலும் ஐபிஓ விலையான 949 ரூபாயை தொட முடியவில்லை, அதிகப்படியான எதிர்பார்ப்புக்கு மத்தியில் பட்டியலிடப்பட்ட நிலையில் 9 சதவீத தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
42500 கோடி ரூபாய் இழப்பு
எல்ஐசி ஐபிஓ வெளியீடும் போது இந்நிறுவனம் ரூ.6 லட்சம் கோடி ரூபாய் அளவில் மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இன்றைய சரிவுக்குப் பின் சந்தை மதிப்பீடு சுமார் 42500 கோடி ரூபாய் சரிந்து எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு 5.57 லட்சம் கோடி ரூபாயாகச் சரிந்தது.
சந்தை மதிப்பீடு
பட்டியலிடப்பட்ட முதல் சில நிமிடங்களில் பங்கு வெளியீட்டு விலையில் ரூ.6,00,242 கோடிக்கு எதிராக ரூ.5,57,675.05 கோடி சந்தை மூலதனத்தைப் பெற்றது. இது ஹிந்துஸ்தான் யூனிலீவர்-ன் ரூ.5.33 லட்சம் கோடி மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் 4.85 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டை விடவும் அதிகமாகும்.
5வது பெரிய நிறுவனம்
இதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தின் 6.36 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டை விடக் குறைவாகும். இதன் மூலம் எல்ஐசி இந்தியாவின் 5வது மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. நீண்ட கால முதலீட்டின் மீது அதிகப்படியான நம்பிக்கை கொண்டு இருக்கும் நிலையில் எல்ஐசி விரைவில் டாப் 3 இடத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது எனச் சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
Macquarie ரேட்டிங்
இதேவேளையில் Macquarie நிறுவனம் எல்ஐசி நிறுவனத்தின் நியூட்டரல் ரேட்டிங் கொடுத்து 1000 ரூபாய் அளவிலான டார்கெட் விலையைக் கொடுத்துள்ளது. ஆனாலும் எல்ஐசி பங்கு விலையில் முதல் நாளில் பெரும் மாற்றும் இல்லாமல் மதியம் 1 மணிக்கு 1.83% உயர்வில் 883.10 ரூபாயாக உள்ளது.