டெல்லி: எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை விற்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதை பொது பங்கு வெளியீடு மூலமாக விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டது.
ஆனால் எல்ஐசி ஒரு நல்ல லாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக இருக்கும் போது, அதை ஏன் பொது பங்கு வெளியீட்டு செல்ல அனுமதிக்க வேண்டும். அரசாங்கத்தின் முதலீடுகளில் கணிசமான அளவு எல்ஐசி வழங்கியுள்ளது என பலவாறு எதிர்ப்புகள் கிளம்பின.
மேலும் அரசாங்கத்திற்கு நிதி தேவைப்படும் போதெல்லாம் எல்ஐசியைத் தேடி செல்கிறது. அதிலும் உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூகத்துறை மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றிற்கும் நிதி வழங்கி வருகிறோம் என்றெல்லாம் எல்ஐசி ஊழியர் சங்கங்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையில் இன்று வெளியான பிசினஸ் டுடே அறிக்கையில், எல்ஐசி-யின் பங்கு விற்பனை இந்த ஆண்டு இல்லை. இது அடுத்த ஆண்டில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் எல்ஐசி பொது பங்கு வெளியீட்டுக்கான பணிகள் நான்கு கட்டங்களில் நடந்து கொண்டுள்ளன. அதோடு இந்த பொதுப்பங்கு வெளியீட்டுக்காக சில திருத்தங்களை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
மார்ச் 31, 2021ம் நிதியாண்டிற்குள் அரசு நிர்ணயித்த 2.1 லட்சம் கோடி இலக்கினை அடைய, எ,ல்ஐசி-யின் பங்கு விற்பனை மிக அவசியம். எனினும் பொது பங்கு வெளியீட்டு முன்பு செய்ய வேண்டிய பணிகள் முடிவடைந்த பின்னரே, பொது பங்கு வெளியீடு குறித்தான முடிவுகள் எடுக்கப்படும்.
பின்னர் பொதுபங்கு வெளியீட்டில் எத்தனை சதவீத்ம் பங்குகள் இருக்கும் என்று முடிவு செய்யப்படும். எஸ்பிஐ கேப்ஸ், டெலாய்ட் ஐபிஓவிற்கு முந்தைய ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் எல்ஐசி-யுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
ஆக அடுத்த ஆண்டில் இந்த பங்கு வெளியீடு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக, இந்த பங்கு வெளியீடு தள்ளி போயிருக்கலாம். நடப்பு நிதியாண்டில் இதுவரையில் எந்தவொரு பொதுத்துறை நிறுவனத்தில் உள்ள பங்குகளை, அரசு திட்டமிட்ட படி செய்ய இயலவில்லை.