பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிதி பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய லைப் இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி பங்குகளை விற்பனை செய்து ஐபிஓ வெளியிட்டு அதன் மூலம் நிதி பற்றாக்குறையை ஈடு செய்யலாம் எனத் திட்டமிட்டது.
இதற்காக மார்ச் 31ஆம் தேதிக்குள் மத்திய அரசு எல்ஐசி ஐபிஓ வெயிட வேண்டும் என்பதற்காக அனைத்து பணிகளையும் வேக வேகமாகச் செய்த நிலையில் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் முதலீட்டுச் சந்தையில் எல்ஐசி ஐபிஓ-விற்குச் சாதகமாக இருந்த பல காரணிகள் எதிராக மாறியது.
இதனால் எல்ஐசி ஐபிஓ வெளியிடுவதை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
எல்ஐசி நிறுவனம்
எல்ஐசி நிறுவனத்தின் வர்த்தகம், முதலீடுகள், பெரு முதலீட்டாளர்கள் அனைத்தும் இந்திய சந்தையைச் சார்ந்து இருந்தாலும், இந்த ஐபிஓ-வில் பெரும் பகுதி பங்குகளை நிதியமைச்சகம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் வர்த்தகம், நாணய மதிப்பு என அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் ஐபிஓ வெளியிட்டால் கடுமையான பாதிப்பு எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.
மே 2022
இதனைக் கருத்தில் கொண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டி திட்டமிடப்பட்ட எல்ஐசி ஐபிஓ அடுத்த நிதியாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கிடைத்துள்ள தகவல் படி மத்திய அரசு மே மாதத்தின் துவக்கம் அல்லது மத்தியில் எல்ஐசி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறு மதிப்பீடு
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் வெளியிடப்பட்ட உட்பொதிக்கப்பட்ட மதிப்பு விதிகளின்படி மே மாதம் வரை ஐபிஓவிற்குச் செல்லுபடியாகும். இக்காலகட்டத்தைத் தாண்டினால் எல்ஐசி நிர்வாகம் மீண்டும் அதன் மதிப்பீட்டை மறு ஆய்வு செய்து செபியிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
அமெரிக்க வட்டி விகிதம்
இதனால் மே மாதம் முடிவிற்குள் மத்திய அரசு கட்டாயம் வெளியிட முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வின் தாக்கத்தையும் கணக்கிட முடியும் என்பதால் மே மாத துவக்கத்தில் கட்டாயம் ஐபிஓ வெளியாகும்.