நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் நிறுவனம் ஐபிஓ வெளியிடும் நாள்-ஐ இன்று அறிவித்துள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டிய ஐபிஓ ரஷ்ய - உக்ரைன் போர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் முதலீட்டுச் சந்தை ரஷ்ய - உக்ரைன் போர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், மத்திய அரசு பல மாற்றங்கள் உடன் நடப்பு நிதியாண்டின் நிதி நெருக்கடியைக் குறைக்கும் விதமாக 21,257 கோடி ரூபாய் அளவிலான நிதியை இந்த ஐபிஓ மூலம் திரட்ட உள்ளது.
எல்ஐசி ஐபிஓ
எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ மே 4ஆம் தேதி துவங்கும். மே 2ஆம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கும், மே 4 ஆம் தேதி பிற முதலீட்டாளர்களுக்குத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மே 9 ஆம் தேதி எல்ஐசி ஐபிஓ-வில் முதலீடு செய்வதற்கான கதவுகள் மூடப்பட உள்ளது.
எல்ஐசி பங்கு விலை
இந்த எல்ஐசி ஐபிஓ-வில் ஒரு பங்கு விலை ரூ.902-949 வீதம் ஒரு லாட்-க்கு 15 பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் எல்ஐசி இந்த ஐபிஓ-வில் மொத்த 21,257 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட உள்ளது. ப்ரீ ஐபிஓ பிளேஸ்மென்ட்டில் 5630 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்ட உள்ளது எல்ஐசி.
மதிப்பீடு குறைப்பு
எல்ஐசி நிறுவனம் தற்போது 6,00,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐபிஓ வெளியீட்டு ரூ.21,000 கோடி முதலீட்டைத் திரட்ட உள்ளது. முன்னதாக ரூ.13,00,000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.6,00,000 கோடியாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.
1.1 மடங்கு விலை
இதன் மூலம் எல்ஐசியின் உட்பொதிக்கப்பட்ட மதிப்புகள் அதாவது embedded value சுமார் ரூ.5,40,000 கோடியாகவும் இருக்கும், எனவே எல்ஐசி ஐபிஓ அதன் உட்பொதிக்கப்பட்டதை விடச் சுமார் 1.1 மடங்கு அதிகமாக மட்டுமே மதிப்பிடப்படுகிறது.
லாபம்
பொதுவாகத் தனியார் நிறுவனங்கள் ஐபிஓ-வில் உட்பொதிக்கப்பட்ட மதிப்பை விடவும் 2-3 மடங்கு மதிப்பீட்டில் தான் ஐபிஓ வெளியிடும். ஆனால் எல்ஐசி ரூ.6,00,000 கோடி மதிப்பீடு உடன் 1.1 மடங்கு உட்பொதிக்கப்பட்ட மதிப்பில் ஐபிஓ வெளியிட உள்ளதால் நீண்ட கால முதலீட்டுக்கு மட்டும் அல்லாமல் மிகப்பெரிய அளவில் லாபம் அளிக்கும் ஐபிஓ-வாக எல்ஐசி விளங்கும்.
தள்ளுபடி
எல்ஐசி பாலிசியுடன் பான் கார்டு இணைக்கப்பட்ட எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு இந்த ஐபிஓவில் ரூ.902-949 விலையில் ரூ.60 தள்ளுபடியும், எல்ஐசி ஊழியர்களுக்கும், ரீடைல் முதலீட்டாளர்களுக்கும் ரூ.45 தள்ளுபடியும் அளிக்கப்பட உள்ளது.
3.5% பங்கு மட்டுமே
எல்ஐசி தனது ஐபிஓ அளவை பெரிய அளவில் குறைந்துள்ள வேளையிலும் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியிட உள்ளது எல்ஐசி. முதல் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்த லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் தற்போது 3.5% பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய உள்ளது.
பங்கு ஒதுக்கீடு
இந்த ஐபிஓ-வில் எல்ஐசி விற்பனை செய்யும் 3.5 சதவீத பங்குகளில் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (QIBs) 50 சதவீத பங்குகளும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு 35 சதவீதமும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு 15 சதவீத பங்குகளும் பிரிக்கப்பட்டு உள்ளது.
ஆங்கர் முதலீட்டாளர்கள்
இந்த 50 சதவீத QIB ஒதுக்கீட்டில், 60 சதவீதம் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆங்கர் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஏதுவாக மே 2ஆம் தேதி முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
ரீடைல் முதலீட்டாளர்கள்
மொத்த ஐபிஓ பங்குகளில் எல்ஐசி நிறுவனம் சில்லறை முதலீட்டாளர்களுக்கு 35 சதவீத பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ள காரணத்தால் தாராளமாக அனைத்து முதலீட்டாளர்களும் ஐபிஓ-வில் பங்குகளைப் பெற முடியும். ஒரு லாட்க்கு 15 பங்குகள் அதிகப்படியான விலையான 949 ரூபாய் வைத்துக் கணக்கிட்டால் ஒருவர் 14,235 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும்.