இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷனின் (எல்ஐசி) ஐபிஓ-வில் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான முதலீட்டுக் கதவுகள் மே 2ஆம் தேதி துவங்கிச் சிறப்பான வரவேற்பும் முதலீடும் பெற்றுள்ள நிலையில், இன்று மே 4ஆம் தேதி ரீடைல் முதலீட்டாளர்கள், எல்ஐசி பாலிசிதாரர்கள், எல்ஐசி ஊழியர்கள் முதலீடு செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட உள்ளது.
இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வாக விளங்கும் எல்ஐசி ஐபிஓ இதுவரை யாரும் தகர்க்க முடியாத ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் ஐபிஓ சாதனையை முறியடிக்க உள்ளது எனக் கணிக்கப்படுகிறது.
ரிலையன்ஸ் பவர்
ரிலையன்ஸ் பவர் நிறுவனம் 2008ஆம் ஆண்டு ஐபிஓ வெளியிடும் போது சுமார் 48 லட்சம் ஐபிஓ விண்ணப்பங்கள் குவிந்தது. இந்த அளவீட்டை இதுவரையில் யாரும் முறியடிக்கவில்லை, குறிப்பாகப் பேடிஎம் மிகப்பெரிய தொகைக்கு ஐபிஓ வெளியிட்டும் இந்த இலக்கை அடையவில்லை.
எல்ஐசி
ஆனால் எல்ஐசி மிகவும் எளிதாக இந்த இலக்க தாண்டி புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக இந்தியா முழுவதும் இருக்கும் 2000க்கும் மேற்பட்ட எல்ஐசி அலுவலகத்தில் 14 லட்சம் எல்ஐசி ஏஜெண்ட்கள் உள்ளனர். இதைத் தாண்டி கோடிக் கணக்கான எல்ஐசி பாலிசிதாரர்கள், ரீலைட் முதலீட்டாளர்கள் என எக்கசக்கம்.
எல்ஐசி ஆங்கர் முதலீட்டாளர்கள் வாயிலாக மட்டும் சுமார் 5600 கோடி ரூபாய் முதலீட்டைக் கைப்பற்றியுள்ளது.
1 கோடி விண்ணப்பங்கள்
இதை வைத்து பார்க்கும் போதும் எல்ஐசி நிறுவனத்தின் இந்த ஐபிஓ-வில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பீடு 1.1 அளவில் மட்டுமே இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான முதலீட்டு லாபம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
1.1 மடங்கு உட்பொதிக்கப்பட்ட மதிப்பு
எல்ஐசி ரூ.6,00,000 கோடி மதிப்பீடு உடன் 1.1 மடங்கு உட்பொதிக்கப்பட்ட மதிப்பில் ஐபிஓ வெளியிட உள்ளதால் நீண்ட கால முதலீட்டுக்கு மட்டும் அல்லாமல் மிகப்பெரிய அளவில் லாபம் அளிக்கும் ஐபிஓ-வாக எல்ஐசி விளங்கும்.
தள்ளுபடி
எல்ஐசி பாலிசி பெற்றவர்கள் தத்தம் உரிமையாளரின் பான் கார்டு எண்ணை இணைக்கப்பட்ட எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு இந்த ஐபிஓவில் ரூ.902-949 விலையில் ரூ.60 தள்ளுபடியும், எல்ஐசி ஊழியர்கள் மற்றும் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ரூ.45 தள்ளுபடியும் அளிக்கப்பட உள்ளது. இந்தத் தள்ளுபடி மூலம் கூடுதலான முதலீட்டு விண்ணப்பம் குவியும்.
க்ரே மார்கெட்
மேலும் தற்போது க்ரே மார்கெட் சந்தையில் எல்ஐசி பங்குகள் தனது ஐபிஓ விலையை விடவும் சுமார் 85 ரூபாய் அதிக விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இது ஆங்கர் முதலீட்டாளர்களின் முதலீட்டுக்குப் பின்பு இருக்கும் நிலை.
அரசின் ஆதிக்கம்
எல்ஐசி தனது பங்கு விற்பனை அளவை 5 சதவீதத்தில் இருந்து தற்போது 3.5% பங்குகளாகக் குறைத்துள்ளது, இதனால் அரசின் ஆதிக்கம் இதில் முந்தைய திட்டத்தை விடவும் கூடுதலான ஆதிக்கம் இருக்கும்.
டிமேட் கணக்குகள்
நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்எஸ்டிஎல்) மற்றும் சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீஸ் (சிடிஎஸ்எல்) ஆகிய இரண்டு டெபாசிட்டரிகளின் சமீபத்திய தரவுகளின்படி, ஜனவரி மற்றும் மார்ச் மத்தியில் மட்டும் சுமார் 91 லட்சம் புதிய டிமேட் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, 80.6 மில்லியனாக இருந்த டிமேட் கணக்குகள் எண்ணிக்கை, 2022ஆம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி, 89.7 மில்லியனாக அதிகரித்துள்ளது.