இந்தியாவில் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஐபிஓ வெளியீடு மூலம் மத்திய அரசு மிகப்பெரிய தொகையை முதலீடாகப் பெறத் திட்டமிட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் இந்நிறுவன ஐபிஓ-விற்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் எல்ஐசி ஐபிஓ வெளியிட அனைத்து பணிகளை வேகமாகச் செய்து வரும் நிலையில் முக்கியமாக ஒரு உயர் பணியிடத்தை உருவாக்கவும், அப்பணியிடத்தில் அதிகாரியை நியமிக்க முடிவு செய்துள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரி
நடப்பு நிதியாண்டின் துவக்கம் முதல் எல்ஐசி நிறுவனம் ஐபிஓ வெளியிடுவதற்கான பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து வருகிறது. இதன் படி எல்ஐசி நிறுவனத்தின் உயர் பதவியை சேர்மன் என்பதை மாற்றித் தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றப்பட்டது.
தலைமை நிதியியல் அதிகாரி
இதைத் தொடர்ந்து தற்போது எல்ஐசி நிர்வாகம் புதிதாகத் தலைமை நிதியியல் அதிகாரி அதாவது chief financial officer பணியிடத்தை உருவாக்கவும், இப்பணியிடத்தில் தகுதியான அதிகாரியை நியமிக்க வேண்டும் எனத் தனது இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1 லட்சம் கோடி ரூபாய் ஐபிஓ
எல்ஐசி நிறுவனம் தற்போது ஐபிஓ வெளியிடுவதற்காக மதிப்பீடு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கும் கருதப்படும் நிலையில், மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தின் 5 முதல் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஐபிஓ எப்போது
எல்ஐசி ஐபிஓ எப்போது வரும் என்பதில் உறுதியான முடிவை மத்திய அரசு அறிவிக்காத நிலையில், 2022 நிதியாண்டின் இறுதிக்குள் வரும் என்று ஒரு தரப்பு, இன்னொரு தரப்பு 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்பட்டும் எனக் கூறுகிறது. எது எப்படி இருந்தாலும் எல்ஐசி ஐபிஓ வெளியாவது உறுதி.
10 முதலீட்டு வங்கிகள்
மத்திய அரசு சமீபத்தில் எல்ஐசி ஐபிஓ வெளியிடுவதற்காக இதை நிர்வாகம் செய்யக் கோல்டுமேன் சாச்சீஸ், எஸ்பிஐ கேப்பிடல் மார்கெட், சிட்டி குரூப் என 10 முதலீட்டு வங்கிகளை நியமித்து, நிறுவனத்தின் மதிப்பீட்டை மதிப்பீடு செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பீடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.