எல்ஐசி பாலிசிதாரர்களின் பாலிசிகள் காலாவதியாகி இருந்தால் ரூ.3500 ரூபாய் வரை அபராத தள்ளுபடியில் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
எல்ஐசி பாலிசி எடுத்தவர்கள் எதிர்பாராத காரணத்தினால் பாலிசி தொகையை கட்டாமல் இருந்தால் அதனை புதுப்பித்துக்கொள்ள தற்போது ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்.ஐ.சி நிறுவனம்
இந்தியாவின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான இன்சூரன்ஸ் நிறுவனம் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்பதும் இதில் கோடிக்கணக்கான மக்கள் பாலிசிதாரர்களாக உள்ளனர் என்பதும் தெரிந்ததே.
எல்.ஐ.சி பாலிசி
எல்ஐசி பாலிசி என்பது மற்ற பாலிசி நிறுவனங்களின் பாலிசிகளை விட சிறப்பானது என்பதால் இதில் பலர் பாலிசி எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலாவதியான பாலிசி
ஆனால் அதே நேரத்தில் பாலிசி எடுத்த ஒரு சிலர் தொடர்ச்சியாக பாலிசி தொகையை கட்டாததால் காலாவதி ஆகி உள்ள நிலைமையும் உள்ளது. அவ்வாறு காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க தற்போது சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ULIP அல்லாத பாலிசிகள்
ULIP அல்லாத பாலிசிகளுக்கு தாமத கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி காலாவதியான பாலிசிகளை புதுப்பித்து கொள்ளலாம் என்றும் எல்ஐசி தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.
சிறப்பு தள்ளுபடி
எல்.ஐ.சியின் பாலிசிகள் காலாவதி ஆகியிருந்தால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செலுத்தப்படாத பிரீமியத்தின் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்படும் என்றும் எல்ஐசி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தாமத கட்டணம் சிறப்பு தள்ளுபடி குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.
பிரிமியம் தொகை
ஒரு லட்சம் ரூபாய் வரை 'பிரீமியம்' செலுத்தியிருந்தால், தாமத கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி என்றும், இதில் அதிகபட்சமாக 2,500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3 லட்சம் ரூபாய் வரை பிரீமியம் செலுத்தியிருந்தால், 25 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும், இதில் அதிகபட்சமாக 3,000 ரூபாய் சலுகை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 லட்சத்திற்கும் மேல் பிரிமியம்
3 லட்சம் ரூபாய்க்கு மேல் பிரீமியம் செலுத்தியிருந்தால் 30 சதவீதம் தாமத கட்டணத்தில் தள்ளுபடி கிடைக்கும் என்றும், இதில் அதிகபட்சமாக 3,500 ரூபாய் தள்ளுபடி சலுகை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ இன்சூரன்ஸ் திட்டம்
மேலும் 'மைக்ரோ' இன்ஸ்சூரன்ஸ் திட்டங்களுக்கு காலதாமத கட்டணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி உண்டு என்பதும், செலுத்தப்பட்ட முதல் பிரீமியத்தின் தேதியிலிருந்து, ஐந்து ஆண்டுகளுக்குள் உள்ள பாலிசிகளை சிறப்பு சலுகை திட்டத்தை பயன்படுத்தி புதுப்பித்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.