கொரோனா தொற்று இந்தியாவில் பல முக்கியமான மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்றால் மிகையில்லை, இந்நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தற்போது புதிய கட்டுப்பாடுகளையும், மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது.
இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒன்றாக இது உள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக்குப் பின்பு இந்திய மக்கள் மருத்துவ காப்பீடு மட்டும் அல்லாமல் ஆயுள் காப்பீடு வாங்குவோர் எண்ணிக்கையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் புதிதாக டெர்ம் இன்சூரன்ஸ் வாங்குவோருக்கு புதிய கட்டுப்பாட்டையும் விதிமுறைகளையும் அறிவித்துள்ளது.
டெர்ம் இன்சூரன்ஸ்
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள புதிய கட்டுப்பாடுகள் படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 90 நாட்கள் அதாவது 3 மாதம் காத்திருக்க வேண்டும், இதோடு சில முக்கிய மருத்துவப் பரிசோதனை செய்து அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
கொரோனா பாதிப்புப் படிவம்
இது மட்டும் அல்லாமல் டெர்ம் இன்சூரன்ஸ் வாங்குவோர் அனைவரும் புதிய கொரோனா பாதிப்புக் குறித்த படிவத்தை நிரப்பிச் சமர்ப்பிக்க வேண்டும், அதன் பின்னர் தான் டெர்ம் இன்சூரன்ஸ் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
90 நாட்கள்
கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதா என்பதைப் பொறுத்து, காப்பீட்டு நிறுவனங்கள், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் டெர்ம் பிளான் வாங்க விரும்பும் மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை ஒத்திவைக்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கோருகின்றன என்று பாலிசிபஜார் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதிய டெர்ம் பிளான்
மேலும் டெர்ம் பிளான் இல்லாதவர்களுக்குப் புதிய டெர்ம் பிளான் வாங்கும் போது மற்ற படிவங்களை நிரப்புவதோடு கொரோனா தொற்றுக் குறித்த படிவத்தை நிரப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 90 நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதும் உறுதி செய்யப்படுகிறது.
மார்பு எக்ஸ்ரே
இதைத் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மார்பு எக்ஸ்ரே உடன் பல மருத்துவப் பரிசோதனைக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இவை அனைத்தும் ஏற்கப்பட்டால் தான் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தற்போது டெர்ம் இன்சூரன்ஸ் அளிக்கிறது.