இந்தியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க வேண்டும் என இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது. இதனால் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைத் தாண்டி மற்ற அனைத்து சேவை மற்றும் விற்பனை கடைகளும் முடங்கியிருக்கிறது. இதில் டாஸ்மாக் மற்றும் மதுபான கடைகளும் அடக்கம்.
இந்நிலையில் நாட்டின் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிறுவனங்கள் இந்த லாக்டவுன் காலத்திலும் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி கொடுக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
முன்னணி நிறுவனங்கள்
டியாஜியோ இந்தியா, பெர்நாட் ரிகார்டு, பீம் சன்டாரி, பகார்டி, ரெமி மார்டின் மற்றும் இதர மதுபான இணைந்து, லாக்டவுன் காலத்தில் தினமும் சில மணிநேரம் மட்டும் மதுபானங்களை விற்பனை செய்ய மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
சமுக விலகல்
நாடு முழுவதும் சமுக விலகல் கடைப்பிடித்து வரும் இந்தச் சூழ்நிலையில் மருந்துகள், காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யச் சில மணிநேரம் மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அனுமதியைத் தான் மதுபான நிறுவனங்களும் கேட்டுக்கொண்டு உள்ளது.
மக்களின் நிலை
மதுபானம் கிடைக்காத காரணத்தால் மக்கள் தற்போது நிலையான மனநிலையில் இல்லை. இதனால் பலர் போதைக்காகப் பல விபரீத முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதனாலேயே பலர் மரணம் அடைந்துள்ளது நாம் தினசரி செய்திகளில் பார்க்கிறோம்.
உணவு பாதுகாப்பு 2006
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உணவு இருப்பதைப் போல், 2006 உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் மதுபானமும் சேர்க்கப்பட்டு உள்ளது. தற்போது ஊரடங்கு இருக்கும் காரணத்தால் மதுபானம் விற்பனை செய்யப்படவில்லை, இதனால் நாட்டின் பல பகுதிகளில் கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இது காவல்துறைக்குக் கூடுதல் சுமையாக உள்ளது என Indian Spirits & Wine Association of India (ISWAI) அமைப்பின் தலைவர் அம்ரித் கிரண் சிங் மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளம்
இந்தியாவில் தற்போது மேற்கு வங்காளம் மட்டும் மதுபானங்களை ஹோம் டெலிவரி முறையில் விற்பனை செய்ய அனுமதி கொடுத்துள்ளது. மதுபானம் விற்பனை செய்ய முறையாக உரிமம் வைத்துள்ள கடைகளுக்குப் போன் மூலம் காலை 11 முதல் மதியம் 2 வரையிலான காலத்தில் மதுபானம் ஆர்டர் செய்யலாம்.
இதனைக் கடைகளே மதியம் 2 மணி முதல் 5 மணி வரையில் ஹோம் டெலிவரி செய்ய அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் கடைக்குச் சென்று யாரும் மதுபானம் வாங்க அனுமதி இல்லை.
முக்கிய வருவாய்
ஒவ்வொரு மாநிலத்தின் வருவாயில் 15 முதல் 30 சதவீத வருவாய் மதுபான விற்பனை மூலம் கிடைக்கிறது. மார்ச் 30 உடன் முடிந்த 2019-20ஆம் நிதியாண்டில் மட்டும் மாநில அரசுகள் மது விற்பனை மூலம் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது.