ஹோம் லோன், கார் லோன் என எது வாங்க வேண்டுமானாலும் வங்கிகள் உங்களுடைய சிபில் ஸ்கோரை தான் முதலில் பார்க்கும். சிபில் ஸ்கோர் சிறப்பாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. சிறந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம். அதுவே சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் கடன் பெறுவதில் பிரச்சனை ஏற்படும்.
சிபில் ஸ்கோர் என்றால் என்ன?: சிபில் ஸ்கோர் என்பது 3 எழுத்தைக் கொண்ட எண். இந்த எண் 300 முதல் 900 வரையில் இருக்கும். அவரவர் நிதி நிர்வாகம் எப்படி இருந்தது? என்பதைப் பொறுத்து இந்த ஸ்கோர் வழங்கப்படும். நீங்கள் ஏற்கனவே கடன் பெற்றவரா?, அந்தக் கடனைச் சரியாக அடைத்திருக்கிறீர்களா?, ஏதேனும் இஎம்ஐ-ஐ தவறவிட்டீர்களா?, கடைசியாக நீங்கள் வாங்கிய லோன் எவ்வளவு? அல்லது நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் லோன் எவ்வளவு? என அனைத்து விவரங்களையும் இந்த ஒரு ஸ்கோரை வைத்து வங்கிகள் தெரிந்து கொண்டுவிடும்.
சிபில் ஸ்கோர் 730-க்கு மேல் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதுவே அதற்கு கீழ் இருந்தால் இனிவரும் காலங்களில் கடன் பெற முடியாமல் போகலாம். ஏனெனில் 2027-ஆம் ஆண்டின் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி ஒரு புதிய சிஸ்டமை அறிமுகம் செய்ய இருக்கிறது. வங்கிகள் கடன் பெறுபவர்களை மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக எக்ஸ்பெக்டட் கிரெடிட் கிளாஸ் என்னும் சிஸ்டம் கொண்டு வரப்பட உள்ளது. கடன் பெறுபவர்களை சரிபார்த்து உண்மையிலேயே அவர்கள் கடனை திருப்பி செலுத்தும் தகுதி உடையவர்களா? என்பதை கண்காணிக்கவே இத்தகைய நடவடிக்கை.

கடன் வாங்கும் பலர் இஎம்ஐ கட்டாமல் வங்கிகளை ஏமாற்றி விடுகின்றனர். அந்த சமயத்தில் வங்கிகள் அவர்களுடைய கடனை வாராக்கடன் பட்டியலில் சேர்த்துவிடுகிறது. இனி அப்படி நடக்காது கடன் பெற விண்ணப்பிக்கும் போதே ஒருவர் கடனை சரிவர திருப்பிச் செலுத்துவாரா என்பதை வங்கிகள் தெரிந்து கொண்டுவிடும்.
இந்த நடைமுறை அமலுக்கு வந்தவுடன் கடன் பெறுபவர்களுக்கும் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் வங்கிகளுக்கு இது உச்சபட்ச பாதுகாப்பை வழங்கும் என்பதில் ஐயமில்லை. சிபில் ஸ்கோர் 730-க்கும் கீழ் உள்ள வாடிக்கையாளர்களை வங்கிகள் ரிஸ்க்கான வாடிக்கையாளர்களாக பிரித்து வைக்கும். அவர்களை நல்ல நிதி நடத்தை உடையவராக கருதாது.
இது போன்ற வாடிக்கையாளர்களிடம் அதிகமான கடனை முடக்கி வைக்க பல வங்கிகள் முன்வருவதில்லை. உங்களுடைய வருமானம், வேலை என அனைத்தையும் அலசி ஆராய்ந்த பிறகே லோன் கிடைக்கும். அதுவும் சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும் போது கண்டிப்பாக ஜாமின் கையெழுத்து போடச் சொல்லி ஒரு நபரையோ அல்லது சொத்துக்களையோ வங்கிகள் கேட்கும் வாய்ப்புள்ளது. இதில் கவலைக்குரிய விஷயம் என்ன தெரியுமா? இந்தியாவில் கடன் பெறும் 62% மக்களின் சிபில் ஸ்கோர் 750-க்கும் குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால் 2027-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய குடிமக்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
எனவே இனிவரும் காலங்களில் வங்கிகள் யாருக்கு சிபில் ஸ்கோர் 750 முதல் 800க்கு மேல் இருக்கிறதோ அவர்களையே குறிவைத்து லோன் வழங்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே 2026 ஆம் ஆண்டில் 6 மாதங்கள் ஓடிவிட்டன. இன்னும் சொச்சம் இருக்கும் 6 மாதங்களில் புதிய கட்டமைப்பு வர இருக்கிறது. அதற்குள் உங்களுடைய சிபில் ஸ்கோரை அதிகரிப்பது நல்லது. உங்கள் EMI தொகையை தள்ளி போடாமல் செலுத்த முயற்சி செய்தால் ஓரளவுக்கு சிபில் ஸ்கோரை கட்டுக்குள் கொண்டு வரலாம். அதேபோல கிரெடிட் கார்டு வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்றால் டியூ டேட் வருவதற்கு முன்னரே செலுத்தி விடுங்கள். ஒரே நேரத்தில் பல வங்கிகளில் லோன் கேட்டு அப்ளிகேஷன் போட வேண்டாம். இதுவும் உங்கள் சிபில் ஸ்கோரை கடுமையாக பாதிக்கும்.


Click it and Unblock the Notifications