இந்திய ஆட்டோமோட்டீவ் துறை கொரோனா பாதிப்பாலும், லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்திய ஆட்டோமோட்டீவ் துறை தினமும் 2,300 கோடி ரூபாய் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்தப் பாதிப்பால் இத்துறையில் சுமார் 3.45 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிப்பு அடைந்துள்ளதாக நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய உற்பத்தி சந்தைக்கும் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆட்டோமோட்டீவ் துறையில் ஏற்பட்டு உள்ள இந்தச் சரிவு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2020 இந்திய ஆட்டோமோட்டீவ் துறைக்கு மிகவும் மோசமான காலமாகக் கருதப்படுகிறது.
இந்திய ஆட்டோமோட்டீவ் துறை
லாக்டவுன் காலத்தில் இந்திய ஆட்டோமோட்டீவ் துறை சந்தித்துள்ள அதிகளவிலான நஷ்டம் மற்றும் வேலைவாய்ப்பு பாதிப்புகளைச் சரி செய்யும் முயற்சியாக இந்திய ஆட்டோமோட்டீவ் துறையில் அதிகளவிலான அன்னிய முதலீடுகளை ஈர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கேசவ் ராவ் தலைமையிலான வர்த்தகத் துறை குழு பரிந்துரை செய்துள்ளது.
உற்பத்தி குறைப்பு
மேலும் இந்திய ஆட்டோமோட்டீவ் நிறுவனங்கள் அனைத்திற்கும் சந்தையில் டிமாண்ட் மிகவும் குறைவாக இருக்கும் நிலையிலும், விற்பனை அளவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில் உற்பத்தி அளவை 18 முதல் 20 சதவீதம் வரையில் குறைத்துள்ளது.
3.45 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழப்பு
இதனால் நாடு முழுவதும் இருக்கும் ஆட்டோமோட்டீவ் நிறுவனங்களின் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஆட்டோமோட்டீவ் துறையில் மட்டும் சுமார் 3.45 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாக ஆட்டோமோட்டீவ் துறை அமைப்புக் கேசவ் ராவ் தலைமையிலான வர்த்தகத் துறை குழுவிற்குத் தகவல் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய வேலைவாய்ப்புகள் தடை
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் தற்போது பெரும்பாலான ஆட்டோமோட்டீவ் நிறுவனங்களில் புதிதாக ஊழியர்களை நிறுவனத்தில் சேர்க்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் நாட்டில் சுமார் 286 டீலர்கள் தங்களது கடைகளை மூடியுள்ளனர்.
ஆட்டோமோட்டீவ் உதிரி பாகங்கள்
வர்த்தகப் பாதிப்புக் காரணமாகப் பெரும் ஆட்டோமோட்டீவ் நிறுவனங்கள் உற்பத்தியை 20 சதவீதம் வரையில் குறைத்துள்ள நிலையில், உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் அதிகளவில் குறைந்துள்ளது. மேலும் உதிரிபாகங்கள் தயாரிப்புத் துறையில் இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல இந்த லாக்டவுன் காலத்தில் முடங்கியுள்ளது.
2 வருடம் தேவை
இந்திய ஆட்டோமோட்டீவ் நிறுவனங்கள் இந்திய பாதிப்பில் இருந்து மீண்டு வரக் குறைந்தது 2 வருடம் ஆகும் எனக் கணிக்கப்படுகிறது. இந்திய ஆட்டோமோட்டீவ் துறை தற்போது வர்த்தகப் பாதிப்பு மட்டும் அல்லாமல், தொழிற்துறையின் முழுமையான உற்பத்தித் திறனை அடைய முடியாமல் தவிக்கிறது. இன்னும் பல MSME நிறுவனங்கள் திவாலாகும் நிலையிலும், வேலைவாய்ப்பு பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது.